
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை,காஞ்சிபுரத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இயல்பை விட 84 சதவீதம் மழைப்பொழிவு அதிகரித்து 294 சதவீதம் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இயல்பாக 0.4 சென்டிமீட்டர் மழை பெய்ய வேண்டிய சூழலில்1.8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இயல்பை விட 81 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அக்டோபர் ஒன்று முதல் இன்று வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 7 சென்டிமீட்டர் என்ற நிலையில் 12 சென்டிமீட்டர் மழை பொழிந்துள்ளது. அதேபோல சென்னையில் இயல்பாக 7 சென்டி மீட்டர் பெய்ய வேண்டிய நிலையில் மழையின் அளவு 14 சென்டிமீட்டர் என பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோவை, கரூர் என பல இடங்களில் இயல்பை விட அதிக மழை பொழிந்துள்ளது.