Skip to main content

“ரயில்வே பாதைகளில் 28 மேம்பாலங்கள் இந்த ஆண்டு அமைக்கப்படுகிறது” - அமைச்சர் எ.வ. வேலு 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

28 flyover on railway lines are being constructed this year says Minister Velu

 

வேலூரில் அரசினர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை முழுவதுமாக இடிக்கப்பட்டு ரூ.150 கோடி செலவில் புதிதாக அதி நவீன வசதிகளுடனான மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனைத் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று திடீரென ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

பின்னர் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுக ஆட்சியில் அப்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கார்த்திகேயன் இம்மருத்துவமனையை புதுப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாததால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவரின் கோரிக்கையை ஏற்று 150 கோடியில் அதி நவீன மருத்துவமனை பணிகள் நடக்கிறது. பணிகளை விரைந்து முடிக்க இதனை மூன்று பிரிவுகளாக பிரித்து பணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.500 கோடி தொகையில் கட்டினார்கள். ஆனால் நாங்கள் ரூ.150 கோடியில் கட்டடங்களை அமைக்கிறோம். பணிகளை விரைந்து முடிக்கவும் பணிகள் தர பரிசோதனை மையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாலாற்றின் குறுக்கே விரிஞ்சிபுரத்தில் மேம்பாலம் அமைக்க துறையின் மூலம் ஆய்வுகள் செய்து வரைபடம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்டப்படும். தமிழகத்தில் இந்த ஆண்டு 28 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. காட்பாடியிலும் புதிய ரயில்வே மேம்பாலம் ஒன்று விரைவில் அமையும். அதிமுக ஆட்சியில் பல ரயில்வே மேம்பால பணிகள் துவங்கினர். அதனை முடிக்காமல் விட்டுவிட்டார்கள். அதற்கு காரணம் இணைப்பு சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தாமல் விட்டுச் சென்றனர். அவற்றை கணக்கெடுத்து அந்த பணிகளும் தற்போது நடக்கிறது.

 

செங்கல்பட்டு அருகே செய்யூரில் இருளர் சமுதாயம் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டப்பட்ட வீடுகள் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது. அது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இல்லை, உள்ளாட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த துறை கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்