சேலத்தில், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, பட்டதாரி பெண்ணிடம் 25.70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அழகாபுரம் பெரிய புதூரைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி மோகனாம்பாள் (31). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், மருத்துவத்துறையில் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தார்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, சேலத்தை அடுத்த மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், உறவினர்கள் மூலமாக மோகனாம்பாளுக்கு அறிமுகம் ஆனார். அவர், அதிமுகவில் தனக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாகவும், உயர் அதிகாரிகள் பலருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அதனால் தன்னால் அரசு வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறி அவரை நம்ப வைத்திருக்கிறார்.
இதை நம்பிய மோகனாம்பாள், அரசு வேலைக்காக தினேஷிடம் 25.70 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் அவர் உறுதி அளித்தபடி, அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஒரு லட்சம் ரூபாயை மட்டும் தினேஷ் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதப்பணத்தைத் தராமல் ஏமாற்றி உள்ளார்.
இதையடுத்து மோகனாம்பாள் மல்லூர் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்தார். முதல்கட்ட விசாரணையில் தினேஷ், மேலும் பலரிடமும் இதேபோல் அரசு வேலை ஆசை காட்டி பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கை, உள்ளூர் காவல்நிலையத்தில் இருந்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து டி.எஸ்.பி இளமுருகன், எஸ்.ஐ செந்தில்குமரன் ஆகியோர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.