31 நாட்களில் 2,423 பேர் கைது... ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டத்தில் அதிரடி!

 2,423 arrested in 31 days ... Action on Operation 2.0!

தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதிலிருந்து சில அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ரவுடிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வைத்திருந்த கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து குட்கா, கஞ்சா விற்போரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி கடந்த மாதம் 23 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தார். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு அருகே போதை பெருட்கள் விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பார்சல் மூலம் போதை பொருட்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை வாயிலாக உத்தரவு பிறப்பித்திருந்தார். குட்கா, கஞ்சா கடத்தல், பதுக்கல் சங்கலியை ஒழிக்க 'ஆப்ரேசன் கஞ்சா 2.0' என்ற அந்ததிட்டம் தொடங்கப்பட்டு அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று தமிழக போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், தமிழகத்தில் கடந்த 31 நாட்களில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இதுவரை 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களிலும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதுஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cannabis Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe