
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை அடுத்த தாரமங்கலம், மாட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவர் அந்தப் பகுதியில் விசைத்தறி தொழில் செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி 24 வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டின் காரணமாக இவர் தனது மனைவியை பிரிந்து தனியே வாழ்ந்துவருகிறார்.
மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விமலா(24), கிருஷ்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதில் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு பிறகு அது காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் தனியே வாழும் கிருஷ்ணனை திருமணம் செய்ய முடிவு செய்து அதனை கிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணனும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கிருஷ்ணனும், விமலாவும் சேலத்தைவிட்டு வெளியேறி திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தகவல் அறிந்த விமலாவின் பெற்றோர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் காவல்நிலையத்தில் தங்களது மகள் காணவில்லை என்றும், மாட்டையாபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன்தான் அவரை கடத்திச் சென்றுவிட்டதாகவும் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரை ஏற்ற தாரமங்கலம் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது கிருஷ்ணனும், விமலாவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் தாரமங்கலம் காவல்நிலையத்திற்கு போலீஸார் வரவழைத்துள்ளனர். அதேபோல், புகார் கொடுத்த விமலாவின் பெற்றோரையும் அங்கு வரவைத்துள்ளனர்.
அங்கு விமலாவிடம் அவரது பெற்றோர் தங்களுடன் வருமாறும், வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், விமலா தனது காதலில் உறுதியாக இருந்து கிருஷ்ணனுடனே வாழ்வதாக தெரிவித்தார்.

பிறகு காவல்துறையினரிடமும் விமலா இதனைத் தெரிவித்துள்ளார். அதனை ஏற்ற காவல்துறையினர் மேஜரான விமலாவின் முடிவைத் தான் ஏற்க முடியும் என பெற்றோரிடம் கூறி விமலாவை கிருஷ்ணனுடன் அனுப்பிவைத்தனர். 52 வயது நபரை 24 வயது பெண் காதலித்து திருமணம் செய்து அவருடன் சென்ற விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.