ஈரோடு மாவட்டம், தாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜான்சிராணி, சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த டிசம்பர் 4ம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறக்கும் போதே நஞ்சை குடித்துவிட்டதாக அப்போது மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதையடுத்து, மேலும் எட்டு நாட்கள் அதற்காக அந்தக் குழந்தைக்கு சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மருத்துவர்கள் கூற அவர்களும் வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
அதன் பின் குழந்தைக்கு அடிக்கடி சளி, மூச்சுத்திணறல் இருந்து வந்துள்ளது. இதற்காக சிவகிரியில் உள்ள தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன் பின் கடந்த 27ம் தேதி காலை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மீண்டும் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, 29ந் தேதி காலை ஜான்சி ராணி குழந்தைக்கு பால் கொடுத்துப் படுக்க வைத்துவிட்டு சமையல் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து குழந்தையைத் தொட்டுப் பார்த்தபோது, குழந்தை எவ்வித அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. உடனடியாக தாண்டாம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சிவகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பிறந்து 24 நாட்களில் குழந்தை இறந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிவகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜான்சி ராணிக்கு பிரசவம் நடந்த போது அங்கு டூட்டியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லாமல், செவிலியர் பிரசவம் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவர்கள் செவிலியர்களைப் பிரசவம் பார்க்க வைப்பதோடு, அதில் இது போல் ஏதாவது விபரீதம் அல்லது இறப்பு நேரிட்டால் டூட்டிக்கு வராத மருத்துவருக்கு உதவி செய்யும் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் மீதும் சம்பந்தமே இல்லாத கிராம சுகாதார செவிலியர்கள் மீதும் பழியைப் போட்டுவிட்டு டாக்டர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் எனச் செவிலியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உண்மையில், பிரசவத்தின்போதோ அல்லது பிரசவத்திற்கு பிறகு 90 நாட்களுக்குள் தாய் அல்லது சேய் மரணம் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதங்கத்துடன் கூறுகிறார்கள் செவிலியர்கள்.