Skip to main content

இரண்டடி ஆழத்திலேயே 23 ஐம்பொன் சிலைகள்; சீர்காழியில் ஆய்வாளர்கள் ஆய்வு

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

23 idols of Impon found at a depth of two feet in Sirkazhi

 

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகளையும் செப்பேடுகளையும் சென்னையிலிருந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரத்தின் நடுவே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சட்டைநாதர் கோவில். இது தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான கோயிலாகும். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் உமையம்மை வழங்கிய ஞானப்பாலை அருந்தி தேவாரத்தில் முதல் பதிகத்தைப் பாடிய தலமான சட்டைநாதர் கோவிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, வருகின்ற மே மாதம் 24 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. குடமுழுக்கை முன்னிட்டு கோவிலின் மேல கோபுர வாசல் அருகே நேற்று யாகசாலை அமைப்பதற்காக குபேர மூலையில் ஜேசிபி எந்திரம் மூலம் மண் எடுப்பதற்காகப் பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் 2 அடி ஆழத்திலேயே அரை அடி முதல் 2 அடி உயரமுள்ள 23 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

 

சிலைகளோடு உடுக்கை, மணி, கலசம், சலங்கை, தீபத்தட்டு உள்ளிட்ட பூஜை பொருட்களும், திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பதிகங்கள் பதிக்கப்பட்ட 410 முழுமையான செப்பேடுகளும், 83 பின்னப்பட்ட செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டன. தருமபுர ஆதீனத்தின் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிலைகள் மற்றும் செப்பேடுகளைப் பார்வையிட்டு சிறப்பு பூஜைகளை நடத்தினார். தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் அதிகாரிகள் கோவிலுக்கு வந்து சிலைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் 13 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக இருக்கலாம் எனவும் இவை அனைத்தும் மதிப்பிட முடியாதவை எனவும் கூறப்பட்டது.

 

இதனையடுத்து சிலைகள் செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் வருவாய்த் துறைகளின் கண்காணிப்பில் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக பிரிவோடு செயல்படும்  திருக்கோவில் திருமடங்களின் ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் பராமரிப்பு பாதுகாப்பு நூலாக்கத் திட்டப்பணி முனைவர் தாமரை பாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளர்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுநர் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளர் பிரகாஷ் குமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவாரப் பதிகம் பதிக்கப்பட்ட செப்பேடுகளைப் பார்வையிட்டு அவை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது; யாரால் எழுதப்பட்டது; என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். 

 

முதற்கட்ட ஆய்வில் செப்பேடுகள் தலா 400 கிராம் எடையும் 68 சென்டிமீட்டர் நீளமும், ஏழு புள்ளி ஐந்து சென்டிமீட்டர் அகலமும் உடையதாக உள்ளது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை செப்பேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்டெடுக்கப்பட்டுள்ள செப்பேடுகளில் என்ன பதிகங்கள் உள்ளன; புதிய  தேவாரப் பதிகங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் எனத் தெரிவித்தனர். ஆய்வின்போது சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், கோவில் கண்காணிப்பாளர், மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் பத்ரி நாராயணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு நடைபெறுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.