Skip to main content

ரூபாய் 2000? எடப்பாடியின் பழைய கணக்கு புதுப்பிக்கப்படுமா?

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண ஒரு படி அரிசித் திட்டத்தைச் செயல்படுத்துவேன் என்று 1967- ஆம் ஆண்டில் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார் அண்ணாதுரை. ஆனால், காலம் அவரைக் கொண்டு சென்றதால், அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது. அதேபோல், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, சிறப்பு உதவித் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்து 3 மாதங்களாகியும் அந்தத் திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தவில்லை. ஆனால், இப்போது அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவோம். விரைவில் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில்தான் எடப்பாடியின் சாமர்த்தியம் இருக்கிறது. 
 

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான அரசாணை ஏற்கனவே பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு வாக்காளர்களுக்குச் சட்டப்பூர்வமாக பணம் வழங்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  'சட்டப்பஞ்சாயத்து இயக்கம்' உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கத் தடையில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது.  அதனால், மார்ச் 4-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் வைத்து, இந்தத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 

இதற்கிடையே, நிதியுதவி பெறும் பயனாளிகள் தேர்வில் குளறுபடி இருப்பதாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை என்று கூறிவிட்டு, தேர்தலை மனதில் கொண்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது’ என்று கூறியிருந்தார். மேலும், ‘9 பேர் கொண்ட குழு  பயனாளிகள் பட்டியலைத் தேர்வு செய்வதாக அரசாணையில் கூறப்பட்டிருக்கிறது. இது முறைகேட்டுக்கு வழி வகுக்கும்’என்று அவர் முறையிட்டிருந்தார்.

 2000 rupees Will cm Edappadi's old account be updated


இந்த வழக்கு, மார்ச்  21-ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி,  “நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது. அதனால், சிறப்பு உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேலும், பயனாளிகளின் விவரங்களை கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தப்பட்டு விட்டது” என்று கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
 

பொதுவாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, புதிய திட்டத்தைத்தான் தொடங்க முடியாது, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தடையில்லை என்பது யதார்த்தம். ஆனால், மார்ச் 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர், "தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், இந்தத் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம்" என்றார். நீதிமன்றமும் இதை  ஏற்றுக் கொண்டது.
 

மே 27-ஆம் தேதியோடு தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துவிட்டன. எடப்பாடி பழனிசாமி நினைத்திருந்தால், அன்றே இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்திருக்கலாம். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அதைப்பற்றி வாயே திறக்காத முதல்வர், கடந்த  15-ஆம் தேதி,  அண்ணா பிறந்தாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் விரைவில் வழங்கப்படும்..” என்றார். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருப்பதால், வீட்டுக்கு ரூ.2 ஆயிரம் தந்து வாக்குகளைக் கவரலாம் என்பது எடப்பாடியின் திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் அரசுத்துறை வட்டாரத்தில். 
 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,  ரூ.2000 திட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால், தற்போது நிறுத்தி வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் திரும்பத் திரும்பச்  சொன்னார்கள். தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக ரூ.2 ஆயிரம் கொடுப்போம் என்றும் உறுதியளித்தார்கள். இந்த முறையாவது பணம் கொடுப்பார்களா? அல்லது, அதேபோல் ஏதாவது சொல்லி மக்களை ஏமாற்றி விடுவார்களா? எடப்பாடிக்கே வெளிச்சம்!




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.