Skip to main content

வறுமையில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! சேலம் களஞ்சியம் அமைதி புரட்சி!!

Published on 11/02/2020 | Edited on 12/02/2020

சேலத்தில், களஞ்சியம் மகளிர் குழுக்களின் தொடர் முயற்சியால் 20 ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் கொடிய பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் களஞ்சியம், ஓசையின்றி பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

சேலத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே, ஏஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் முதலாம் ஆண்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அறக்கட்டளையின் முதன்மை ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் விழா நடந்தது. சேலம் மண்டல நிர்வாகி சிவராணி கருத்துரை வழங்கினார்.

''விழா முடிவில் சிவராணியைச் சந்தித்துப் பேசினோம். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எப்படி சாத்தியமானது?'' எனக்கேட்டோம்.

20 thousand families recovering from poverty Peace Revolution in Salem



''மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொண்டு நிறுவனங்களுக்கும் மேலாண்மைப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஏஸ் பவுண்டேஷன் வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் வாயிலாக வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மரக்கன்று நடுதல், தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், மது ஒழிப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளையும் செய்து வருகிறோம்.

இப்பணிகளை முதன்மை நோக்கங்களாக கொண்டு சேலத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் (9.2.2019), 4130 களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 52 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து, இந்த அறக்கட்டளையை தொடங்கினர். எங்களின் சீரிய பணிகளால், ஒரே ஆண்டில் 8000 களஞ்சியம் மகளிர் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இதன் மூலம், தற்போது லட்சம் குடும்பத் தலைவிகளைக் கொண்ட பெரும் அறக்கட்டளையாக உருவெடுத்திருக்கிறோம்.

20 thousand families recovering from poverty Peace Revolution in Salem

 

எங்கள் அறக்கட்டளையின் பெயர்தான் புதியதே தவிர, இங்குள்ள களஞ்சியம் குழுக்களுடன் 20 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். மகளிரிடம் சேமிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தினோம். இப்போதும் களஞ்சியம் பெண்கள் மாதம் 200 அல்லது 300 ரூபாய்தான் சேமிப்புத் தொகையாக செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் இத்தொகை மாறுபடலாம். அது, குழுவின் விதிகளைப் பொருத்தது. அதாவது ஒரு நாளைக்கு பத்து 10 ரூபாய் சேமிப்புக்காக ஒதுக்கப்  பழக்கப்படுத்துகிறோம். 'உண்மையில் சிறுதுளி பெருவெள்ளம்' என்ற பழமொழி களஞ்சியம் பெண்களுக்குதான் பொருந்தும். குழுவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்களது சேமிப்புத் தொகையாக சேர்த்து வைத்துள்ளனர்.

குழுக்களின் சேமிப்புத்தொகையைப் போல மூன்று மடங்கு வரை வங்கிகளில் இருந்து கடனுதவி பெற்றுக் கொடுக்கிறோம். இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, 'பாங்க் ஆப் இந்தியா' ஆகிய வங்கிகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் அளப்பரியது. கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும்போது, என்ன காரணத்திற்காக கடன் தேவை என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச்செலவு, ஏதேனும் சுய தொழில் தொடங்க அல்லது மருத்துவச் செலவுகளுக்காக கடன் கேட்பவர்கள்தான் அதிகம். என்ன நோக்கத்துக்காக கடனுதவி பெற்றார்களோ அது நிறைவேறுகிறதா என்பதையும் களஞ்சியம் ஊழியர்கள் மூலம் கண்காணிப்போம்.

சேமிப்பின் மீது மட்டுமின்றி, முத்ரா திட்டத்தின் கீழும் பலருக்கு 5 லட்சம் ரூபாய்கூட கடனுதவி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். இதன்மூலம் பெண்கள் தங்கள் வீடுகளில் விசைத்தறிக் கூடங்களை நிறுவி இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இளம்பிள்ளை ரக பட்டு சேலைகள் மட்டுமின்றி கேரளா ரக சேலைகள், ஆரணி பட்டு, கோவை பட்டு சேலைகள், வேட்டிகளும் நெய்து வருகின்றனர்.

நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்கள் வீட்டிலேயே பலகாரம், இனிப்புகள் தயாரித்து விற்கின்றனர். கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் எங்களது மற்றொரு குறிக்கோள். கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வாங்க ஆர்வம் காட்டும் களஞ்சியம் பெண்களுக்கு கடனுதவி வழங்க முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் சுமாராக 20 ஆயிரம் குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்து, சமூகத்தில் அவர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்திருக்கிறோம்,'' என்கிறார் சிவராணி.

20 thousand families recovering from poverty Peace Revolution in Salem

இன்றைய காலக்கட்டத்தில் ஆவணப்படுத்துதலும் முக்கியம் அல்லவா? அதனால்தான், வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளை தேர்வு செய்து, 'புதிய வானம்' என்ற பெயரில் நூலாக தொகுத்து வெளியிடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் களஞ்சியம் கு-ழுக்களுக்கு 1200 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் கேட்டு நமக்கும் வியப்பு மேலிட்டது. இப்பெண்கள் சிறுகச்சிறுக 80 கோடி ரூபாய் சேமிப்பாக தங்களது குழு க்களின் பெயர்களில் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருக்கிறார்கள். பெண்களின் இத்தகைய சேமிப்புப் பழக்கத்தால்தான் பொருளாதார மந்த நிலையிலும் இந்திய பெரிய அளவில் நிலைகுலைந்து போவதில்லை. குறிப்பாக, தமிழ்நாடு.

வறுமையில் இருந்து மீண்ட பெண்களில் ஒருவரான ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சங்கத்தமிழ் களஞ்சியம் குழு உறுப்பினர் பாஞ்சாலை என்பவரையும் சந்தித்தோம்.

'எங்கள் பகுதியில் கைமுறுக்கு தயாரிப்புத் தொழில் பிரசித்தி பெற்றது. கைமுறுக்குக்குத் தேவையான அரிசி மாவு ஆட்டுவதில் பல பெண்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பத்தில் ஒரே ஒரு கிரைண்டர் மெஷின் வாங்கி மாவு அரைத்துக் கொடுத்தேன். பலரிடமும் வரவேற்பு இருந்தது. அதன்பிறகு, களஞ்சியம் குழு மூலமாக 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி பெற்று, கோவையில் இருந்து புதிதாக இரண்டு கிரைண்டர் மெஷின்கள் வாங்கினேன்.

அதற்கு முன்பும் களஞ்சியம் அளித்த 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி மூலம்தான் இந்த தொழிலை ஒரே ஒரு கிரைண்டரை வைத்துத் தொடங்கினேன். ஒரு கிலோ மாவு அரைத்துக் கொடுத்தால் கிலோவுக்கு 10 ரூபாய் சேவைக்கட்டணம் வசூலிக்கிறேன். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் வீட்டில் கிரைண்டர் ஓடிக்கொண்டே இருக்கும். என் வீட்டுக்காரரை விட நான்தான் இப்போது அதிகமாக சம்பாதிக்கிறேன்,'' என்றார்.

சேலம் களஞ்சியம், வறுமை ஒழிப்பில் இருந்து மட்டுமின்றி, பல பெண்களின் கணவன்மார்களை மதுவின் பிடியில் இருந்தும் வெற்றிகரமாக மீட்டெடுத்திருப்பதாகவும் சொன்னார் 'ஏஸ் பவுண்டேஷன்' சிவராணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.