Skip to main content

வறுமையில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! சேலம் களஞ்சியம் அமைதி புரட்சி!!

Published on 11/02/2020 | Edited on 12/02/2020

சேலத்தில், களஞ்சியம் மகளிர் குழுக்களின் தொடர் முயற்சியால் 20 ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் கொடிய பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் களஞ்சியம், ஓசையின்றி பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

சேலத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே, ஏஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் முதலாம் ஆண்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அறக்கட்டளையின் முதன்மை ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் விழா நடந்தது. சேலம் மண்டல நிர்வாகி சிவராணி கருத்துரை வழங்கினார்.

''விழா முடிவில் சிவராணியைச் சந்தித்துப் பேசினோம். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எப்படி சாத்தியமானது?'' எனக்கேட்டோம்.

20 thousand families recovering from poverty Peace Revolution in Salem



''மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொண்டு நிறுவனங்களுக்கும் மேலாண்மைப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஏஸ் பவுண்டேஷன் வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் வாயிலாக வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மரக்கன்று நடுதல், தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், மது ஒழிப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளையும் செய்து வருகிறோம்.

இப்பணிகளை முதன்மை நோக்கங்களாக கொண்டு சேலத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் (9.2.2019), 4130 களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 52 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து, இந்த அறக்கட்டளையை தொடங்கினர். எங்களின் சீரிய பணிகளால், ஒரே ஆண்டில் 8000 களஞ்சியம் மகளிர் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இதன் மூலம், தற்போது லட்சம் குடும்பத் தலைவிகளைக் கொண்ட பெரும் அறக்கட்டளையாக உருவெடுத்திருக்கிறோம்.

20 thousand families recovering from poverty Peace Revolution in Salem

 

எங்கள் அறக்கட்டளையின் பெயர்தான் புதியதே தவிர, இங்குள்ள களஞ்சியம் குழுக்களுடன் 20 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். மகளிரிடம் சேமிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தினோம். இப்போதும் களஞ்சியம் பெண்கள் மாதம் 200 அல்லது 300 ரூபாய்தான் சேமிப்புத் தொகையாக செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் இத்தொகை மாறுபடலாம். அது, குழுவின் விதிகளைப் பொருத்தது. அதாவது ஒரு நாளைக்கு பத்து 10 ரூபாய் சேமிப்புக்காக ஒதுக்கப்  பழக்கப்படுத்துகிறோம். 'உண்மையில் சிறுதுளி பெருவெள்ளம்' என்ற பழமொழி களஞ்சியம் பெண்களுக்குதான் பொருந்தும். குழுவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்களது சேமிப்புத் தொகையாக சேர்த்து வைத்துள்ளனர்.

குழுக்களின் சேமிப்புத்தொகையைப் போல மூன்று மடங்கு வரை வங்கிகளில் இருந்து கடனுதவி பெற்றுக் கொடுக்கிறோம். இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, 'பாங்க் ஆப் இந்தியா' ஆகிய வங்கிகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் அளப்பரியது. கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும்போது, என்ன காரணத்திற்காக கடன் தேவை என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச்செலவு, ஏதேனும் சுய தொழில் தொடங்க அல்லது மருத்துவச் செலவுகளுக்காக கடன் கேட்பவர்கள்தான் அதிகம். என்ன நோக்கத்துக்காக கடனுதவி பெற்றார்களோ அது நிறைவேறுகிறதா என்பதையும் களஞ்சியம் ஊழியர்கள் மூலம் கண்காணிப்போம்.

சேமிப்பின் மீது மட்டுமின்றி, முத்ரா திட்டத்தின் கீழும் பலருக்கு 5 லட்சம் ரூபாய்கூட கடனுதவி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். இதன்மூலம் பெண்கள் தங்கள் வீடுகளில் விசைத்தறிக் கூடங்களை நிறுவி இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இளம்பிள்ளை ரக பட்டு சேலைகள் மட்டுமின்றி கேரளா ரக சேலைகள், ஆரணி பட்டு, கோவை பட்டு சேலைகள், வேட்டிகளும் நெய்து வருகின்றனர்.

நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்கள் வீட்டிலேயே பலகாரம், இனிப்புகள் தயாரித்து விற்கின்றனர். கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் எங்களது மற்றொரு குறிக்கோள். கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வாங்க ஆர்வம் காட்டும் களஞ்சியம் பெண்களுக்கு கடனுதவி வழங்க முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் சுமாராக 20 ஆயிரம் குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்து, சமூகத்தில் அவர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்திருக்கிறோம்,'' என்கிறார் சிவராணி.

20 thousand families recovering from poverty Peace Revolution in Salem

இன்றைய காலக்கட்டத்தில் ஆவணப்படுத்துதலும் முக்கியம் அல்லவா? அதனால்தான், வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளை தேர்வு செய்து, 'புதிய வானம்' என்ற பெயரில் நூலாக தொகுத்து வெளியிடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் களஞ்சியம் கு-ழுக்களுக்கு 1200 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் கேட்டு நமக்கும் வியப்பு மேலிட்டது. இப்பெண்கள் சிறுகச்சிறுக 80 கோடி ரூபாய் சேமிப்பாக தங்களது குழு க்களின் பெயர்களில் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருக்கிறார்கள். பெண்களின் இத்தகைய சேமிப்புப் பழக்கத்தால்தான் பொருளாதார மந்த நிலையிலும் இந்திய பெரிய அளவில் நிலைகுலைந்து போவதில்லை. குறிப்பாக, தமிழ்நாடு.

வறுமையில் இருந்து மீண்ட பெண்களில் ஒருவரான ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சங்கத்தமிழ் களஞ்சியம் குழு உறுப்பினர் பாஞ்சாலை என்பவரையும் சந்தித்தோம்.

'எங்கள் பகுதியில் கைமுறுக்கு தயாரிப்புத் தொழில் பிரசித்தி பெற்றது. கைமுறுக்குக்குத் தேவையான அரிசி மாவு ஆட்டுவதில் பல பெண்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பத்தில் ஒரே ஒரு கிரைண்டர் மெஷின் வாங்கி மாவு அரைத்துக் கொடுத்தேன். பலரிடமும் வரவேற்பு இருந்தது. அதன்பிறகு, களஞ்சியம் குழு மூலமாக 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி பெற்று, கோவையில் இருந்து புதிதாக இரண்டு கிரைண்டர் மெஷின்கள் வாங்கினேன்.

அதற்கு முன்பும் களஞ்சியம் அளித்த 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி மூலம்தான் இந்த தொழிலை ஒரே ஒரு கிரைண்டரை வைத்துத் தொடங்கினேன். ஒரு கிலோ மாவு அரைத்துக் கொடுத்தால் கிலோவுக்கு 10 ரூபாய் சேவைக்கட்டணம் வசூலிக்கிறேன். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் வீட்டில் கிரைண்டர் ஓடிக்கொண்டே இருக்கும். என் வீட்டுக்காரரை விட நான்தான் இப்போது அதிகமாக சம்பாதிக்கிறேன்,'' என்றார்.

சேலம் களஞ்சியம், வறுமை ஒழிப்பில் இருந்து மட்டுமின்றி, பல பெண்களின் கணவன்மார்களை மதுவின் பிடியில் இருந்தும் வெற்றிகரமாக மீட்டெடுத்திருப்பதாகவும் சொன்னார் 'ஏஸ் பவுண்டேஷன்' சிவராணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.