Skip to main content

“20 சதவீத போனஸ் மற்றும் ஊக்கதொகை வழங்க வேண்டும்” நியாயவிலைக் கடைபணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பேட்டி

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

"20 percent bonus and incentive." Interview with K. Balasubramanian, Special President

 

 

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு நியாயவிலைக் கடைபணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின்  சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். இதற்காக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் ஊதிய மாற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் கூட்டுறவுத் துறை மற்றும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கைகளை முறையாகப் பெற்று வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வுதியம் அறிவிக்கப்பட வேண்டும்.  குறைந்தபட்சம் ரூபாய் 10,000 என்ற அடிப்படையில் ஓய்வூதியம் இருக்க வேண்டும்.

 

கரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கான இழப்பீடு தொகை வழங்குவதில் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும். பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டுள்ளதால் அதற்கு பதிலாக விழித்திரையை பயன்படுத்தி பொருட்களை வழங்குவதற்காக அரசு பரிசோதனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். வங்கி ஏ.டி.எம் மூலமாகவே ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

 

தீபாவளி போனஸ் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான முறையில் வழங்கப்பட வேண்டும். 20 சதவீத போனஸ் மற்றும் ஊக்கதொகை வழங்க வேண்டும்.  ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் மூலமாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பும் போராட்டத்தை வைத்துள்ளோம்.  

 

அதனால் தமிழக அரசு உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என்றார். மேலும் பயோமெட்ரிக் முறையை உணவுத்துறை அமைச்சர் முறையாக பரிசோதனை செய்து அமல்படுத்தாமல், அவசர அவசரமாக ஏற்படுத்திவிட்டார். அதனால் செல்ஃபோன் டவர் பிரச்சனை சர்வர் பிரச்சனை போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. அதனால் விழித்திரையை பயன்படுத்தி உணவு பொருளை வழங்குவதற்கு சோதனை முறையில் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். இவருடன் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரா ராஜா மாநில துணைத்தலைவர் துறை சேகர் சிதம்பரம் நகர நிர்வாகிகள் யோகராஜ் செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்