தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் முதலில் பெரும் அதிர்ச்சியாக அறியப்பட்டது ஈரோடு மாவட்டம் தான்.
இதற்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு 300 படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்காக தயார்நிலையில் உள்ளது. தாய்லாந்து நாட்டு நபர்கள் இரண்டு பேருக்கு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தொற்று பிறகு 3 ஆக உயர்ந்து அடுத்து 5 ஆக மாறி, 6 என என அறிவிக்கப்பட்டது. பிறகு 10 என்ற எண்ணிக்கைக்கு மாறியது. ஒரேநாளில் மேலும் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஈரோட்டில் 20 + 4 என 24 கரோனா நோயாளிகள் கொண்ட மாவட்டமாக மாறியது.
தமிழக அளவில் அதிகம் கரோனா நோயாளிகளை கொண்ட மாவட்டமாக ஈரோடு மாறி இருப்பது ஈரோட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி கரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள், அவர்களுடன் தொடர்புடைய பகுதிகளை தனிமைப்படுத்தும் அதிகாரிகளின் வேக நடவடிக்கை இன்னும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் 20 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது,
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 86 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 40 நபர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் 20 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. அதேநேரம் 20 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்கிற நல்ல செய்தியும் வந்திருக்கிறது. கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு இருப்பவர்களில் பலரும் தாய்லாந்து நாட்டு குழுவினருடன் நெருங்கி பழகியவர்கள்தான். எனவே கண்காணிப்பில் உள்ளவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
தனிமைப்படுத்தும் நடவடிக்கை இனி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். மேலும் கரோனா தொற்று இல்லாதவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணப்புக்கு பின் வழக்கமான கண்காணிப்புக்கு மாற்றப்படுவார்கள். 28 நாட்களுக்கு பிறகு சகஜ வாழ்வுக்கு திரும்புவார்கள். தற்போது வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், காசி, புது டெல்லி பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களுக்கு உண்மையான தகவல்களை கூறுவதன் மூலம் மருத்துவ பரிசோதனை, சமூகவிலகல் நடவடிக்கைகள் மூலம் தங்களையும், மற்றவர்களையும் பாதிக்காத வகையில் இருக்க மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.