என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று பொய் சொல்லி சோதனை செய்வதாக செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் இருபது லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற நபர்கள் ஆறு பேர் தேடப்பட்டு வந்த நிலையில் ஆறு பேரும் சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெரு பகுதியில் வசித்து வந்த ஜமால் என்பவர் வீட்டில் கடந்த 13ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாகக் கூறி 6 பேர் சோதனையிட்டுள்ளார்கள். அப்பொழுது வீட்டிலிருந்து பல லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். இது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஜமால் மற்றும் அவரது சகோதரர்கள் புகாரளித்தனர். இதனையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்ற நிலையில், ஆறு மாவட்டங்களுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
ஊட்டி, வேலூர், கோவை, பழனி உள்ளிட்ட பல இடங்களில் சென்று தேடுதல் நடைபெற்றது. இந்நிலையில் குற்றவாளிகள் ஆறு பேரும் சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இதில் முக்கியக் குற்றவாளியான பாஜகவை சேர்ந்த வேலு என்கின்ற வேங்கை அமரன் ராயபுரத்தைச் சேர்ந்தவர். கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாயாக பணியாற்றி வந்த புஷ்பராஜ், பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ், ரவி உள்ளிட்ட ஆறு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் ஆறு பேரும் குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் என்பதும், நஷ்டம் அடைந்ததால் பாஜகவை சேர்ந்த வேலு திட்டத்தின் படி ஜமாலிடம் அதிகமாகப் பணம் இருப்பதைத் தெரிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் விசாரணையில் இவர்கள் இதுபோல் 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.