வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்தவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் ஆறுமுகம் என்பவரின் 18 வயது மகன் பாலமுருகன். அதே பகுதியைச் சேர்ந்த ராமு என்பவரின் 19 வயது மகன் முத்துவேல். இவர்கள் இருவருக்கும் சரியாக படிப்பு வரவில்லை எனக் கட்டட வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளியன்று இருவரும் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் கஸ்பாவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி இருவரும் மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பாலத்தின் கீழ் செல்லும் கழிவுநீர் கால்வாயில் விழுந்துள்ளனர். கீழே விழுந்த வேகத்தில் தலையில் உடம்பில் அடிப்பட்டு முத்துவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலத்தில் இருந்து கீழே விழுந்தவர்களைப் பார்த்து அதிர்ச்சியான அப்பகுதி மக்களும், அந்தவழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாலமுருகனை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து உயிரிழந்து கிடந்த முத்துவேலின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.