Published on 16/08/2022 | Edited on 16/08/2022

ஊத்தங்கரை அருகே இரண்டு வயது குழந்தை வீட்டை உள்ளே தாழிட்டுக் கொண்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் போராடி கதவை உடைத்து மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கவர்னர் தோப்பு பகுதியில் வசித்து வரும் ரமேஷ்-பவித்ராவின் இரண்டு வயது குழந்தை வீட்டின் உள்ளே தாழிட்டுக் கொண்டு வெளியே வர முடியாமல் அலறியது. இது தொடர்பாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல்வேறு முறைகளில் போராடினர். உள்ளே இருந்த குழந்தைக்கு வெளியே இருந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி தாழ்ப்பாளை திறந்து வெளியே கொண்டுவர முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. இறுதியில் ஜன்னல் கம்பியை உடைத்து மற்றொரு சிறுவனை உள்ளே நுழைய வைத்து கதவைத் திறந்து குழந்தையை மீட்டனர்.