
கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி பல்லடம் வழியாக அதிக பாரத்துடன் கண்டெய்னர் லாரி ஒன்று பல்லடம் நால்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி வலதுபுறமாகத் திரும்பி உள்ளது. இதில் இருந்த கண்டெய்னர் லாரி இடதுபுறம் சரிந்துள்ளது. அப்போது அந்த சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது இந்த கண்டெய்னர் ஆனது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்களும் உடல்நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார் உடனடியாக அந்த கண்டெய்னர் லாரியை 3 கிரேன்கள் உதவியுடன் மீட்டனர். அதோடு இந்த விபத்தில் சிக்கியிருந்த 2 பெண்களின் உடலையும் மீட்டனர். இதனையடுத்து இருவரது உடலும் பல்லடம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்தும், கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.