ஈரோட்டில் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது!

2 persons arrested for hoarding 850 kg of ration rice

ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கூடுதல் இயக்குநர் அருண் உத்தரவின் பேரில், கோவை கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் ஈரோடு இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டும், வாகன சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த சோதனையில் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு, ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கமலா நகர்ப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசியத்தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது 850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (27), பிரகாஷ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வட மாநிலத்தவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பதற்காகப் பதுக்கி வைத்திருந்ததாகத்தெரிவித்தனர். இதனை அடுத்து சூர்யா, பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

arrested Erode police rice
இதையும் படியுங்கள்
Subscribe