Skip to main content

நைஜீரியா இளைஞர்களால் சென்னை பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
2 Nigerian youths arrested for defrauding a female doctor and extorting 2 crore

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் தேடி வந்துள்ளார். அவரின் மேட்ரிமோனி புரொபைல் பார்த்து ஹாங்காங்கில் டாக்டராக இருப்பதாக கூறி ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு பேசத் தொடங்கியுள்ளார். அவரின் பெயர் அலெக்ஸாண்டர் சான்சீவ். இருவரும் மருத்துவதுறை என்பதால், வெளிநாட்டு டாக்டர் மீது  பெண் மருத்துவருக்கும் திருமணம் ஆசை வந்துள்ளது. இருவரும் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலமாக நாடுகடந்து காதலித்து வந்துள்ளனர். 

இந்த நிலையில், வெளிநாட்டு மாப்பிள்ளை அலெக்ஸாண்டர் சான்சீவ் தனது வருங்கால மனைவியான பெண் மருத்துவருக்கு ஆசையாக விலை மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்ததாக போனில் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு இம்ப்ரஸான பெண் மருத்துவர், தனது வருங்கால ஹாங்காங் கணவன் அனுப்பிய பரிசுப் பொருட்களை திறந்து பார்க்க ஆசையுடன் காத்திருந்துள்ளார். இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி பெண் மருத்துவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், ''உங்களுக்கு ஹாங்காங்கில் இருந்து பார்சல் வந்திருக்கு..'' என்ற இனிப்பு செய்தியை கூறி முகவரியை சரிபார்த்துள்ளனர். இதைக்கேட்டு உள்ளம் மகிழ்ந்த பெண் மருத்துவர் முகவரியை உறுதிப்படுத்தி, பார்சல் எப்போது சென்னை வந்து சேரும் எனக்கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ''பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது வைர நெக்லஸ், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் உள்ளன. 

எனவே அதற்கு சுங்கவரி செலுத்தினால் மட்டுமே பொருட்களையும் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். இல்லையென்றால் டெல்லி போலீஸாரிடம் தகவலைச் சொல்லி உங்களை அரஸ்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என கறாராக பேசியுள்ளனர். தொடர்ந்து பேசியவர்கள், ''டெல்லி போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாங்கள் கொடுக்கின்ற வங்கிக் கணக்குகளுக்கு தனித்தனியே சுங்கவரி அனுப்ப வேண்டும்..'' என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய பெண் மருத்துவர் தனது வருங்கால கணவருக்காக சுங்கத்துறை அதிகாரிகள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குக்கு ரூ.2 கோடியே 87 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதன் பிறகும் அவர்கள் கூறிய நேரத்தில் பரிசுப் பொருட்கள் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, விளக்கம் கேட்க போன் செய்த பெண் மருத்துவர் அதிர்ந்து போயுள்ளார். டெல்லி சங்கத்துறை அதிகாரிகள் என பேசியவர்கள் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

உடனே, தனது வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தொடர்புகொண்டுள்ளார்  பெண் மருத்துவர். அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து தாமதிக்காமல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புகாரைப் பெற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி அளித்த உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதாஞ்சலி மேற்பார்வையில் சைபர் க்ரைம் ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண் மருத்துவர் கொடுத்த செல்போன் நம்பர் மற்றும் வங்கி கணக்கை வைத்து குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். ஆனால், அந்த மோசடி கும்பல் தங்கியிருக்கும் இடம் குறித்து தகவல் ஏதுமில்லாமல் தனிப்படை போலீசார் வியூகம் ஒன்றை அமைத்துள்ளனர். இதையடுத்து, பெண் மருத்துவர் அனுப்பிய பணத்தை மோசடி கும்பல் ஏ.டி.எம் மூலம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெல்லியிலேயே போலீசார் சில தினங்கள் தங்கியிருந்துள்ளனர். 

அவர்கள் நினைத்தபடியே டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்களில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பணம் எடுத்துள்ளனர். ஆனால், டெல்லியில் கடும் பனி குளிர் நிலவுவதால் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் முகத்தை மறைத்தப்படி மங்கி குல்லா மற்றும் மாஸ்க் அணிந்து வந்ததால் சிசிடிவி மூலம் அவர்களின் அடையாளம் காண்பது சிக்கலாக இருந்துள்ளது. இதையடுத்து, முகத்தை மறைத்தபடி 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்த மோசடி கும்பல்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார் வீடியோவில் ஒரு முக்கிய க்ளூ இருப்பதை கண்டுபிடித்தனர். அதில், மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரின் கருப்பு நிற செருப்பில் B என்ற ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருப்பதை க்ளூவாக வைத்து அந்த செருப்பை அணிந்து ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பவர்களை தமிழக தனிப்படை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். அதன் மூலம், பி எழுத்து எழுதப்பட்ட கறுப்பு நிற செருப்பை அணிந்து ஏ.டி.எம்-முக்கு வந்த  நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுயாபுச்சி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவரைத் தொடர்ந்து, சின்னெடூ என்ற மற்றோரு நைஜீரிய நபரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் சேர்ந்து சென்னை பெண் மருத்துவரிடம் அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளை, சுங்கத்துறை அதிகாரி, டெல்லி போலீஸ் என கூறி 2 கோடியே 87 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மோசடி சம்பவத்திற்கு பயன்படுத்திய 7 செல்போன்கன், 3 லேப்டாப்கள் மற்றும் 40 டெபிட் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், போலீசார் அவர்களிடம் செய்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த மோசடி கும்பலின் தலைவன் நைஜீரியாவிலிருந்தபடியே, கல்வி, டூரிஸ்ட், வேலை உள்ளிட்ட விசாக்களில் இந்தியாவுக்கு சிலரை அனுப்பிவைத்து, சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சி பின்னணி தமிழக போலீசாருக்கு தெரியவந்தது. 

மேலும், இவர்கள் திருமண தகவல் மையங்களிலிருந்து டாக்டர், இன்ஜினீயர், தொழிலதிபர்களைத் தேர்வு செய்து,  கிஃப்ட் அனுப்பியிருப்பதாகவும் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபடுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், கும்பலின் தலைவனையும், பெண் மருத்துவர் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் 2 கோடியே 87 லட்சம் ஏமாற்றமடைந்த நிலையில்.. தமிழக போலீசார் விரைந்து குற்றவாளிகளை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.