Skip to main content

அடுத்தடுத்து நேர்ந்த சோகம்; உயிரிழந்த சிறுமிகள் - காணாமல் போன தாய் 

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
2 girls who were swept away in the water  passed away

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வேட சின்னானூர் அருகே சின்னக்குட்டை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சங்கீதா(40). இவர்களுக்கு தர்ஷினி (17), கீர்த்தனா (10) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் தர்ஷினி அதே பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பும், கீர்த்தனா நடுபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சங்கீதா தனது மகள்கள் தர்ஷினி மற்றும் கீர்த்தனாவுடன் செண்பகப் புதூர் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றார். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 2000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சங்கீதா வாய்க்கால் கரையோரம் நின்று துணி துவைத்துக் கொண்டிருந்தார். தர்ஷினி மற்றும் கீர்த்தனா இருவரும் அருகே குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தர்ஷினி நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்து சங்கீதா மகளைக் காப்பாற்றுவதற்காகச் சென்றார். அவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைய மகள் கீர்த்தனா தாய் பின்னால் சென்றார். அவரையும் நீர் அடித்துச் சென்றது. இதை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்துக் கூச்சலிட்டனர். மூன்று பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இது குறித்த தகவல் பரவி, உடனடியாக நாகராஜ் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். கடத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நீரில் இறங்கி மூவரையும் தேடத் தொடங்கினர். நள்ளிரவு 12.30 மணி அளவில் கோபி கடத்தூர் அடுத்த மில்மேடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தர்ஷினி மற்றும் கீர்த்தனா உடல்கள் மீட்கப்பட்டன. சிறுமியின் உடல்களைப் பார்த்து நாகராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் சிறுமிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தாய் சங்கீதா என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. இன்று 2வது நாளாக அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீரில் மூழ்கி சிறுமிகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.