Skip to main content

லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 2 பேர் கைது!  

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

2 employees of the highway department who took bribes were arrested!

 

தர்மபுரி அருகே லஞ்சம் வாங்கியதாக நெடுஞ்சாலைத்துறை அலுவலக கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் ஆகிய இரு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.     

 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த சந்திரசேகர் (48) என்பவர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.  இதே அலுவலகத்தில், பாலக்கோடு அருகே உள்ள தண்டுகாரன அள்ளியைச் சேர்ந்த தனபால் (40) இளநிலை உதவியாளராகவும், அரூரைச்  சேர்ந்த குப்புசாமி (42) என்பவர் சாலைப் பணியாளராகப் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக குப்புசாமிக்கு ஊதிய நிலுவைத்தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனக்குரிய ஊதிய நிலுவையை வழங்கும்படி கண்காணிப்பாளர் சந்திரசேகரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 4000 ரூபாய் கொடுத்தால் ஊதிய நிலுவைக்கான கோப்புகளை உடனடியாக முடித்துக் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.

 

தனக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய ஊதிய நிலுவையை பெறவே லஞ்சம் கேட்கிறார்களே என விரக்தி அடைந்த குப்புசாமி,  அப்போதைக்கு சந்திரசேகர் கேட்டபடியே லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத குப்புசாமி,  இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட 4000 ரூபாய் தாள்களை எடுத்துச் சென்ற குப்புசாமி, கண்காணிப்பாளர் சந்திரசேகரிடம் கொடுக்கச் சென்றார். ஆனால் அவரோ, அந்தப் பணத்தை இளநிலை உதவியாளர் தனபாலிடம் கொடுக்கும்படி கூறியதால் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.  

 

ஏற்கனவே சாதாரண உடையில் அந்த அலுவலகம் அருகே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் பாய்ந்து சென்று தனபாலை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அலுவலக கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதன் பேரில்தான் அந்தப் பணத்தை வாங்கியதாகக் கூறியுள்ளார். அதன் பேரில் சந்திரசேகரையும் கைது செய்தனர். அந்த அலுவலகத்தில் காவல்துறையினர் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.