
தமிழ்நாட்டில் இன்று (05.06.2021) 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் அடுத்த நான்கு நாட்களுக்கு லட்சத்தீவு, கேரள கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வட உள் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 12 செண்டி மீட்டர் மழையும், காரையூரில் 20 செண்டி மீட்டர் மழையும், எட்டையபுரத்தில் 8 செண்டி மீட்டர் மழையும், பேரையூரில் 7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.