Skip to main content

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்த 2 சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க சி.பி.எம் கோரிக்கை! 

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
2 boys who fell in a septic tank and died Rs. CPM demands Rs 20 lakh compensation

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து ஒரே வீட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும்வழங்க சி.பி.எம் வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செட்டித்தெரு விட்டல்தாஸ் நகரைச் சேர்ந்தவர்கள் குமார், ராஜேஸ்வரி. இருவரும் கறம்பக்குடி பேரூராட்சியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்களுக்கு கிருத்திக்ரோஷன்(6), அரவிந்த்(5). என்ற 2 மகன்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை  வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் ஏறி இருவரும் விளையாடியுள்ளனர். ஏதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டி உடைந்து இருவரும் உள்ளே விழுந்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை காணததால் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். பின்னர், கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்த்த பொழுது தொட்டி உடைந்து இருந்ததும், அதற்குள் இருவரும் மூழ்கி கிடைப்பதும் தெரியவந்தது.

 

2 boys who fell in a septic tank and died Rs. CPM demands Rs 20 lakh compensation


இருவரையும் மீட்ட உறவினர்கள் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சிறுவர்களின் உடல்கள் கறம்பக்குடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுவர்களின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து எஸ்.சங்கர் செய்தியாளர்களிடம் கூறும் போது.. அரசு புறம்போக்கு இடத்தில் தனியார் ஆக்கிரமித்து இந்த கழிவுநீர்த் தொட்டியை அமைத்துள்ளனர். அருகிலேயே குடிநீருக்கான ஆழ்துளைக் கிணறும், நீர்த்தேக்கத் தொட்டியும் உள்ளது. இத்தகைய சூழலில் தனியார் அந்த இடத்தில் கழிவுநீர்த் தொட்டியை அமைக்க கறம்பக்குடி பேரூராட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்தது? பேரூராட்சி அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், ஒப்பந்த அடிப்படையில் தூய்மை  தொழிலாளர்களாக வேலை செய்யும் பெற்றோர் இருவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.