Skip to main content

ஆடிப்பெருக்கில் 2 சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு; சிதம்பரத்தில் சோகம்

Published on 03/08/2023 | Edited on 03/08/2023

 

2 boys in river in Adiperukku; Tragedy in Chidambaram

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் குளித்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சிதம்பரத்தில் இரண்டு சிறுவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சரவணன் மகன் சபரிவாசன் (10). இவர் அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் லோகேஸ்வரன் (9) இவரும் அதே பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் இவருடைய தம்பி சசிதரன் வயது 7, இவரும் அதே பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த 3 மாணவர்களும் அதே பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று பட்டம் விடுவதற்காகச் சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் இறங்கி குளிக்கச் சென்றனர்.

 

அப்போது ஆற்றில் லோகேஸ்வரனும், சபரிவாசனும் ஆழமான பகுதி என்று தெரியாமல் தண்ணீரில் இறங்கி குளித்தனர். மேலும் சபரிவாசன் தம்பி சசிதரன் தண்ணீரில் மேல் பகுதியில் இறங்கி குளித்துள்ளார். அப்பொழுது அருகில் குளித்த 2 சிறுவர்களும் ஆற்றுத் தண்ணீரில் உள்ளே மூழ்கியதைப் பார்த்த மாணவன் சசிதரன் பயந்து போய் அங்கிருந்து வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறினான்.

 

இதைக் கேட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கொள்ளிடம் ஆற்றில் இறங்கித் தேடினர். அப்போது 2 சிறுவர்கள் உடல் கண்டெடுக்கப்பட்டது. சபரிவாசன் உடலை குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு டாக்டர்  இல்லாததால் சிறுவனை அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லோகேஸ்வரன் உடலை அவர்களின் உறவினர்கள் அவரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் செய்து உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்