Skip to main content

அரசு வேலை வாங்கி தருவதாக 17 லட்சம் ரூபாய் சுருட்டல்... மாஜி முதல்வரின் உதவியாளர் மீது புகார்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

17 lakh rupees rolled out to buy government jobs; Complain about former Chief Minister's aide!

 

சேலம் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 10 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். 

 

கடந்த அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி பழனிசாமியுடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, ஓமலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியுள்ளார். 

 

இதற்கிடையே, கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவருக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி, அவரிடம் 17 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளார். 

 

இந்தப் பணத்தை தமிழ்ச்செல்வன், அவருடைய நண்பர் செல்வக்குமார் என்பவர் மூலமாக கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி மணி அவருக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. 

 

அதனால் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பித் தரும்படி தமிழ்ச்செல்வன் பலமுறை கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் போக்குக் காட்டி வந்துள்ளார் மணி. 

 

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தமிழ்ச்செல்வன், இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி மணி மீது புகார் அளித்திருந்தார். 

 

இதுகுறித்து சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் நேரடி விசாரணை நடத்தியதில், தமிழ்ச்செல்வன் தரப்பிலிருந்து மணியின் வங்கிக் கணக்கில் 17 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. 

 

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இதற்கிடையே மணி தலைமறைவாகிவிட்டார். அவரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

 

மணியிடம் வேறு யாரேனும் அரசு வேலைக்காகப் பணம் கொடுத்து ஏமாந்திருந்தால் புகார் அளிக்கலாம் என்றும் மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.