சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, "குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை கண்காணித்து, விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகாமூரி உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்துக் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆய்வு அலுவலர்கள் புதன்கிழமை திடீர் ஆய்வு நடத்தினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஊ.கொளப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தி.மு.க பிரமுகருமான பி.வி.பி முத்துக்குமாருக்குச் சொந்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஊத்தங்காலில் 2 குடிநீர் நிலையங்கள், கொத்தனூர், சாத்தமங்கலம், கடலூர் வட்டத்திலுள்ள ராமாபுரம், கண்ணாரப்பேட்டை, எம்.புதூர், திருவந்திபுரம், பண்ருட்டி அருகில் உள்ள ஒரு குடிநீர் நிலையம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள இரண்டு குடிநீர் நிலையம் உள்பட, மாவட்டத்தில் 17 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரே நாளில் அதிரடியாக 17 குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சீல் வைத்த சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.