தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்புவரை 32 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,634 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 2,296 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 361 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 461 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 06 பேரும் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த நிலையில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,915 ஆக அதிகரித்துள்ளது. . மேலும், தற்பொழுது வரை 38,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் தமிழ்நாட்டில் 7,365 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 33.63 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று ஒரே நாளில் 1,02,822 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் கரோனா பாதுகாப்பு மற்றும் பரிசோதனைகளை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.