
சமூக வலைத்தள பக்கமான முகநூலில் பெண் போல போலியாக கணக்கை உருவாக்கி அதன் மூலம் பணம் பறித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அரியலூர் பெரியகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த டிப்ளமோ இன்ஜினியர் ஆன பிரசாந்த்குமார். சமூக வலைத்தள பக்கமான முகநூல் பக்கத்தில் ஸ்ரேயா என்ற பெண் பெயரில் போலி கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலம் பலருக்கு வலை விரித்து வந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த மணிமாறன் என்ற ஓட்டுநருடன் பழகி வந்துள்ளார். மணிமாறனும் அவர் பெண் என நினைத்துக் கொண்டு பழகி வந்துள்ளார்.
தொடர்ந்து பேசி பழகி அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பிரசாந்த் குமார் பறித்தது தெரிய வந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் கொடுத்த புகார் அடிப்படையில் பிரசாந்த் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் இதேபோன்று பெண் போல சாட்டிங் செய்து பலரிடம் பணம் நகை பறித்தது தெரியவந்துள்ளது.