சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதையடுத்து சிறுமியின் உறவினர்கள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
முதல்கட்ட சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 18 வயது நிரம்பாத, திருமணம் ஆகாத சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவர்கள் சேலம் நகர மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சிறுமியிடம் விசாரித்தனர். பெற்றோரை இழந்த சிறுமி, உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகியதில் தான் கர்ப்பம் அடைந்ததாக கூறியுள்ளார். இவர்களின் பழக்கத்தை அறிந்த உறவினர்கள், உரிய வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறியிருந்தார்களாம்.
இதையடுத்து சிறுமியின் காதலனிடமும், அவருடைய உறவினர்களிடமும் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தை நலக்குழும அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். சிறுமிக்கு பிறந்த குழந்தை, எடை குறைவாக உள்ளதால் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.