![16 kg gold seized; Busy in Virudhunagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/EipgoJDVsN8XLtB4jrQAbGqCRAW-W2ToeG-GiXDbDJQ/1712064880/sites/default/files/inline-images/a5869.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேநேரம் மறுபுறம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு உரிய ஆவணமின்றி 16 கிலோ தங்கம் கொண்டு சென்ற பொழுது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே சந்திரரெட்டியார்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கூரியர் வாகனத்தில் சோதனையிட்ட போது 16 கிலோ அளவிலான 8. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டுள்ளது. பறிமுதல் தங்கம் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பல்வேறு நகை கடைகளுக்கு மூன்று தனியார் கூரியர் வாகனத்தில் தங்கம் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.