Skip to main content

நகைக்கடை அதிபர் வீட்டில் 1.50 கிலோ தங்க நகை கொள்ளை...கண் மூடிய நேரத்தில் கைவரிசை காட்டிய பலே ஆசாமிகள்...!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில், பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, 1.50 கிலோ பிளாட்டினம், வைரம், தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற கொள்ளை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

1.50 kg of gold Theft near Salem

 



சேலம் ஓமலூர் பிரதான சாலையில் குரங்குசாவடி பகுதியில் ஏஎன்எஸ் திவ்யம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சீனிவாசன் மகன் ஸ்ரீபாஷ்யம். நகைக்கடை அருகில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை (டிச. 12) இரவு வீட்டில் இருந்த அனைவரும் மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கினர். வெள்ளிக்கிழமை (டிச. 13) அதிகாலையில், வீட்டுக்குள் இருந்து மர்ம நபர்கள் இருவர், காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து வெளியே வந்தனர். அவர்கள் கையில் சின்னதாக இரண்டு மூட்டைகள் வைத்திருந்தனர். 

வாயில் அருகே பணியில் இருந்த இரவுக் காவலாளி தங்கவேல், அவர்களை பிடிக்க முயன்றார். மர்ம நபர்கள் காவலாளியை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தங்கவேல், வயதானவர் என்பதால் மர்ம நபர்களை அவரால் துரத்திப் பிடிக்க முடியவில்லை. என்றாலும், இதுபற்றி ஏனோ அவர், உடனடியாக வீட்டு உரிமையாளரிடம் கூறாமல், அப்படியே தூங்கிவிட்டார். வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்த ஸ்ரீபாஷ்யம், தரை தளத்திற்கு வந்தார். அங்கே, பாதுகாப்பு பெட்டகம் திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த 1.50 கிலோ பிளாட்டினம், வைரம், தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்துச் சென்றிருப்பதை அறிந்த அவரும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து சூரமங்கலம் காவல்நிலையத்தில் ஸ்ரீபாஷ்யம் புகார் அளித்தார். மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர்கள் செந்தில், தங்கதுரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை வெள்ளிக்கிழமை காலையில் நேரில் பார்வையிட்டனர். இக்கொள்ளைச் சம்பவம், அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பாதுகாப்புப் பெட்டகத்தின் மீது வைக்கப்பட்டிருந்த சாவியின் மூலம் பெட்டகத்தைத் திறந்து, நகை, பணத்தை மர்ம நபர்கள் எவ்வித பதற்றமும் இன்றி கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். களவுபோன நகைகள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. 

சம்பவம் நடந்த வீட்டைச் சுற்றிலும் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. நகைக்கடை உரிமையாளர் ஸ்ரீபாஷ்யம், அன்றாடம் இரவில் தூங்கச் செல்லும் முன், மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அலாரம் அடிக்கும் வகையில் சுவிட்ச்ஆன் செய்துவிட்டு படுக்கைக்குச் செல்வது வழக்கம். ஆனால், நேற்று அவ்வாறு சுவிட்ச்ஆன் செய்யாமல் தூங்கச் சென்றது குறித்தும், இச்சம்பவத்தில் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதும் குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் செந்தில்குமார் கூறுகையில், ''மர்ம நபர்கள் சம்பவம் நடந்த வீட்டின் பின்பக்க கதவை, இரும்பு கம்பியால் நெம்பி திறந்து உள்ளே புகுந்துள்ளனர். பாதுகாப்பு பெட்டகத்தின் மீதுதான் அதன் சாவி இருந்துள்ளது. அதை எடுத்து திறந்து நகை, பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள். மோப்ப நாய் மூலம் திருடர்கள் சென்ற பாதை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, சம்பவ இடத்தில் மிளகாய் பொடி தூவியிருக்கின்றனர்.

மாடியில் வீட்டு உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கும் மர்ம நபர்கள் சென்று, அங்கிருந்த பீரோக்களிலும் கொள்ளை அடிக்க முயன்றிருப்பது தெரிய வந்துள்ளது. கொள்ளையை முடித்துவிட்டு வீட்டுக்குள் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு வெளியேறியுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் முகமூடி அணிந்து கொண்டு வீட்டுக்குள் இருந்து காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து வெளியேறுவது தெரிய வந்துள்ளது. சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்,'' என்றார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.