15 years old boy passes away after sslc result

Advertisment

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி திருக்காம்புலியூர் பஞ்சாயத்து, மலைப்பட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் வீரமணி. இவரது மனைவி மல்லிகா. இத்தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களது மகனான சிவா(15)மலைப்பட்டி அருகிலுள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிவா, தேர்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

நேற்று தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், சிவா தேர்ச்சி பெறாமல் இருந்திருக்கிறார். சிவாவின் தந்தையும்தாயும் வேலைக்கு சென்றுவிட சிவா தனது 13 வயது சகோதரனுடன் வீட்டில் இருந்திருக்கிறார். தேர்வில் தோல்வி அடைந்து விரக்தியில் இருந்த சிவா, தனது வீட்டின் சமையல் அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisment

எதேச்சையாக சமையல் அறைக்குச் சென்ற அவரது தம்பி, சிவா தூக்கில் தொங்கி இருந்ததைக் கண்டு பயந்து அலறி அழுது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு உடனே சிவாவின் தாய்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் அங்கு வந்து சிவாவை பார்த்து கதறி அழுதுள்ளார். அதன்பிறகு சிவாவின் உறவினர்கள்சம்பவம் குறித்து மாயனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த மாயனூர் போலீசார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.