
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதாலும், கோமுகி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மணிமுக்தாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
விருத்தாசலம் அடுத்த கோபாலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு மகன் அலெக்சாண்டர் என்பவர், தனது நண்பர்களுடன் தனது கிராமத்தில் அருகே அமைந்துள்ள குமாரமங்கலம் அணைக்கட்டிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அணைக்கட்டில் நிலைத்தடுமாறி விழுந்ததால், தண்ணீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த சக நண்பர்கள், அவரை மீட்டு கரைப் பகுதிக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தண்ணீரில் மூழ்கியதால் அலெக்சாண்டர் சம்பவ இடத்திடலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர், அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசென்றனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.