Skip to main content

லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி; மடக்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

15 tons of ration rice in a truck

 

சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கரச் சாலை, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாகச் செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அருகேயுள்ள நெக்குந்தி பகுதியில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி அருகே நின்று திருப்பத்தூர் மாவட்டம் பறக்கும் படை அதிகாரிகள், அக்டோபர் 22ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

 

அப்போது சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர் வட்ட வழங்கல் அதிகாரி குமார் தலைமையிலான அதிகாரிகள். லாரியை நிறுத்திய ஓட்டுநர், லாரியை அதிகாரிகள் சோதனை செய்தபோது லாரியில் இருந்து குதித்து இறங்கிய அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.

 

பின்னர் லாரியை சோதனை செய்ததில் அதில் 15 டன்னுக்கு மேல் ரேஷன் அரிசி இருப்பதை உறுதி செய்த பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வாணியம்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரிசி மூட்டைகளுடன் லாரியை கடத்திய கும்பல் கைது

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

Gang arrested for hijacking lorry with bags of rice

 

விழுப்புரம் மாவட்டம் அரியூர் பகுதியை சேர்ந்தவர் தனக்கோடி என்பவரின் மகன் வெங்கடேசன். இவர் தமிழ்நாடு வாணிப கழக சேமிப்புக் கிடங்கில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிக்கு தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் அனுப்பியுள்ளார். அந்த லாரியில் டிரைவராக பணி செய்து வருபவர் சையது சுல் பிக்கர். இவர் நேற்று முன்தினம் முண்டியம்பாக்கம் ரயில்வே நிலையத்திற்கு ரயில் மூலம் வந்த ரேஷன் அரிசி 600 மூட்டைகளை தனது லாரியில் ஏற்றிக்கொண்டு சென்று அதை திண்டிவனம் சந்தை மேட்டுப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் இறக்குவதற்காக கொண்டு வந்து நிறுத்தினார்.

 

இரவு நேரம் என்பதால் இறக்குவதற்கு ஆட்கள் இல்லை அதனால் மறுங்கால் காலை இறக்கி விடலாம் என்று லாரியை சேமிப்பு கிடங்கு முன்பு நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுவர் மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தபோது அரிசி மூட்டைகளுடன் லாரி மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் இது குறித்து லாரி முதலாளி வெங்கடேசனுக்கு தகவலளித்தார். அவர் லாரியை கண்டுபிடித்து தருமாறு திண்டிவனம் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளர் ஐயப்பன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட அரிசி லாரியை கண்டுபிடிப்பதற்காக தீவிரமாக தேடி வந்தனர்.

 

அதன் பொருட்டு போலீசார் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் எனும் கருவி மூலம் லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன் மூலம் கடத்தப்பட்ட லாரி பெரிய பேரம்பட்டு பகுதியில் நிற்பது கண்டறியப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது சேற்றில் லாரி சிக்கி நின்றிருந்தது. அதில் இருந்த 600 அரிசி மூட்டைகளில் 520 மூட்டைகள் காணவில்லை. 80 மூட்டைகள் மட்டுமே அதில் இருந்தன. இதன் மூலம் கடத்தப்பட்ட அரிசி லாரி சேற்றில் சிக்கியதும் வேறு ஒரு லாரியை கொண்டு வந்து அரிசி மூட்டையை அதில் மாற்றி ஏற்றி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அரிசி கடத்திச் செல்லப்பட்ட லாரி கர்நாடக மாநில சூளகிரி பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அரிசி மூட்டையுடன் கடத்தப்பட்ட லாரியை கண்டுபிடித்து கைப்பற்றினர். லாரியை கடத்திச் சென்றதாக விக்கிரவாண்டி அடுத்துள்ள அய்யனாம்பாளையம் இந்திய ராஜ் அவரது கூட்டாளிகள் கந்தன், பொன்னுசாமி, விழுப்புரம், வண்டி மேடு பகுதியைச் சேர்ந்த சையது முஸ்தபா, இவரது சகோதரர் அபுதாஹிர், வேலூர் மாவட்டம் சரளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராம்கி ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அரிசி மூட்டையுடன் லாரியை கடத்திச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட லாரி, 7 செல்போன், ஒரு கார் வாங்கியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆங்காங்கே ரேஷன் அரிசி சில்லறை முறையில் முட்டைகளை கடத்தப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது 600 மூட்டைகளுடன் லாரியை கடத்திய மெகா கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Next Story

லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்; உடந்தையாக இருந்த ஊழியர்கள்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Ration rice in trucks with help of employees
மாதிரி படம் 

 

சேலத்தில், இரவோடு இரவாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக கடையின் விற்பனை ஊழியர் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பெண் ஊழியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

 

சேலம் செவ்வாய்பேட்டை நெய்மண்டி அருணாசலம் தெருவில் சேலம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கீழ் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. ஆக. 14ம் தேதி இரவு, இந்த ரேஷன் கடை முன்பு, ஒரு லாரி நின்றிருந்தது. இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், சந்தேகத்தின் பேரில் அந்த ரேஷன் கடைக்குச் சென்றனர். அப்போது கடையில் இருந்து அரிசி மூட்டைகளை 6 பேர் கும்பல் லாரியில் ஏற்றிக்கொண்டு இருப்பது தெரியவந்தது. 

 

காவல்துறையினரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை கூண்டோடு மடக்கிப் பிடித்தனர். இந்த கும்பல் ஏற்கனவே கொண்டலாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு, செவ்வாய்பேட்டை நெய் மண்டி அருணாசலம் தெரு ரேஷன் கடைக்கு வந்துள்ளதும், கடையில் இருந்தே நேரடியாக அரிசி மூட்டைகளை லாரியில் கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. 

 

கடத்தலுக்காக ஏற்றப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியையும், லாரியையும் காவல்துறையினர் கைப்பற்றினர். ரேஷன் அரிசி, லாரி ஆகியவற்றுடன் பிடிபட்ட 6 பேரையும் சேலம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை வசம்  ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். லாரி ஓட்டுநர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த விக்டர் ஜேம்ஸ் (57) என்பதும், உடன் வந்தவர்கள் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சாதிக் பாஷா (53), வாழப்பாடி வடக்கு திருமனுரைச் சேர்ந்த சுப்ரமணியம் (34), சேலம் குகையைச் சேர்ந்த நடேசன் (43), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஷாமால் கோ மைத் (32), பசந்த் மானா (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. 

 

இரவு ரோந்துக் காவலர்கள் ரேஷன் கடையை நோக்கி வந்தபோது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர், அந்தக் கடையின் எடையாளரான பழனிசாமி (54) என்பது தெரியவந்தது. கடையின் விற்பனை ஊழியர் ஜெயந்திமாலாவுக்கும் (45), எடையாளருக்கும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் நெருக்கமான தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பிடிபட்ட அனைவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இது ஒருபுறம் இருக்க, ரேஷன் ஊழியர்கள் பழனிசாமி, ஜெயந்திமாலா ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு சேலம் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்து, சேலம் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குநர் முத்துவிஜயா உத்தரவிட்டார். 

 

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஜெயந்திமாலா, அருணாசலம் ஆசாரி தெருவில் உள்ள ரேஷன் கடையிலும் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். அந்தக் கடையில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் நடத்திய ஆய்வில், அரிசி, சர்க்கரை ஆகியவை இருப்பு குறைவாக உள்ளது. கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்கள் ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 91,200 என்பது தெரியவந்தது. 

 

தொடர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாலேயே அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ரேஷன் கடையில் இருந்தே நேரடியாக அரிசி கடத்தப்பட்ட சம்பவம் கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.