Skip to main content

15 லட்சம் கொடுக்கல... 6 ஆயிரந்தானே கொடுத்தார்... மோசடி, கொள்ளைக்கு இப்படியொரு பெயர்!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

 15 lakhs ... 6 thousand he gave himself ...

 

விவசாயிகள் வறுமை நிலையில் இருக்கக் கூடாது. நலிவுற்ற விவசாய குடும்பத்திற்கு மத்திய அரசு வாழ்வழிக்கும் எனக் கூறி ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் நேரடி நிதி உதவியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கிஷான் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில்தான் இப்போது மாபெரும் மோசடியும், கொள்ளையும் தமிழகத்தில் ஏகபோகமாக நடந்திருக்கிறது.


நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் இரண்டாயிரம் வீதம் ஆண்டு ஒன்றுக்கு ஆறாயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் தகுதியான விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு வந்தனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திட்டத்தில் சேர விண்ணப்பித்திருந்தனர். பின்னர் வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் இணைந்து விண்ணப்பங்கள் மீது ஆய்வு செய்ததில் 85 ஆயிரம் விவசாயிகள், பயனாளிகள் என நிதியுதவி பெறும் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களை சேர்த்தி மோசடி நடந்தது போல் ஈரோடு மாவட்டத்திலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


சென்ற ஒருவார காலமாக இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் விண்ணப்பங்கள் மற்றும் பயனாளிகள் விவரங்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் முதல் கட்டமாக போலி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் முடக்கம் செய்யப்பட்டன. 


இதுபற்றி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தில் சேர்க்கபட்டவர்களின் விண்ணப்ப விபரம் ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதற்கட்டமாக 550 கணக்குகள் போலியாக துவங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, அந்தக் கணக்குகள் உடனே முடக்கம் செய்யப்பட்டதோடு அந்த மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பதினோரு லட்சம் ரூபாயைக் கையகப்படுத்தி உள்ளோம். ஈரோடு மாவட்டத்தில் குறைந்த அளவில்தான் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திட்டம் துவங்கிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் வரும் விண்ணப்பங்களை வருவாய்துறை, வேளாண்துறை அதிகாரிகளால் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி பயனாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டனர். திட்டத்தின் கடைசி நாட்களில் வெளி இடங்களில் உள்ள கணினி மையங்கள் மூலம் போலி பயனாளிகள் செயற்பட்டுள்ளனர். இப்போது கண்டறியப்பட்டுள்ள 550 நபர்கள் இந்த திட்டத்தில் சேர எவ்வித தகுதியும் இல்லாதவர்கள். ஈரோடு மாவட்டத்தில் நிலம் இருக்கும் அவர்கள் வெளியூரில் வசித்து வருபவர் அல்லது அரசுப் பணியில் இருப்பவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு மாறாக இணைந்த அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மோசடி தொடர்பாக முழு அளவில் விசாரணை நடந்து வருகிறது" எனக் கூறினார்.


ஆனால் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ஏழாயிரம் விண்ணப்பங்களில் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த ஏழாயிரம் விண்ணப்பங்கள் தான் கணினி மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் அதாவது இணை இயக்குனரின் பாஸ்வேர்டு கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து  நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.


வேளாண்துறை, வருவாய்த்துறை மூலம் இணைக்கப்பட்ட விண்ணப்பங்களிலும் பல மோசடிகள் நடந்துள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த ந.செ., ஒ.செ., மா.செ. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மொத்தமாக பல விண்ணப்பங்கள் கொடுத்து இந்த திட்டத்தில் இணைக்க வைத்துள்ளனர்.

 

Ad

 

அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினர் பலரும் பிரதமர் திட்ட நிவாரன நிதியைப் பெற்று வந்துள்ளார்கள். ஆண்டுக்கு ஆறாயிரம் சும்மா வரும் பணத்தை ஏன் விடவேண்டும்? மோடி ஐயா சொன்னாரு 15 லட்சம் தர்றேனு அது நடக்கலே ஏதோ அவரால முடிஞ்சது வருசம் ஆறாயிரம்... அதை தாங்க வாங்குனோம் அது ஒரு தப்புங்களா? என நம்மிடம் கிண்டலாக பேசினார் ஒரு அ.தி.மு.க.நிர்வாகி...!


அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு எல்லாவற்றிலும் முதன்மையான மாநிலமாச்சே... அந்த வரிசையில்தான் இந்த மோசடியும் கொள்ளையும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.