15 kg of jewelery buried in the crematorium ... shocked by the robber's confession!

Advertisment

கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில், கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் நகைகளைத் திருடிய சம்பவம் நிகழ்ந்தது. இதுதொடர்பாக போலீசார் 8 தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அக்கடையில் 15 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகின. கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருந்தன.

Advertisment

இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு பகுதியை அடுத்த குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த டி.கா. ராமன் என்ற 28 வயது இளைஞரைத் தனிப்படை காவல்துறையினர் நேற்று (19.12.2021) கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் திருடப்பட்ட நகை குறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில், நகை உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தார். முதலில் முன்னுக்குப் பின்னான தகவலைக் கொடுத்த டி.கா. ராமன், இறுதியில் ஒடுக்கத்தூர் அருகே உள்ள உத்திர காவேரி ஆற்றின் கரையில் உள்ள ஒரு சுடுகாட்டில் புதைத்ததை தெரிவித்தார். அதனடிப்படையில் அவர் சொன்ன இடத்திற்குச் சென்று நடத்திய சோதனையில், புதைக்கப்பட்டிருந்த 15 கிலோ நகைகளைப் போலீசார் மீட்டனர்.