Skip to main content

கோரிக்கை மனு அளித்த 15 தலைமை ஆசிரியர்கள்... நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அதிகாரிகள்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

The 15 headmaster who submitted the petition

 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆண்டிமடம் வட்டாரக் கிளை சார்பில் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்தித்து மாணவர்கள் நலனைக் கருதி முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 

அதில், ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் கட்டடங்களையும் ஆய்வுசெய்து, பழுது நீக்கம் செய்ய வேண்டிய கட்டடத்தைப் பழுது நீக்கம் செய்து தரக் கோரியும், இடித்து அகற்றப்பட வேண்டிய கட்டடங்களை இடித்து அகற்றி, மாணவர் நலன் மற்றும் பள்ளி நலன் காத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.

 

The 15 headmaster who submitted the petition

 

இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் மாவட்டத் தலைவர் அசோகன், வட்டாரத் தலைவர் வரதராசன், வட்டாரப் பொருளாளர்  ஜான்சன், மாவட்ட துணைத்தலைவர் மோகன்தாஸ், வட்டார துணைச் செயலாளர் ராமன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மணி முருகன், வட்டார துணைச் செயலாளர் மகளிர் திருமதி கண்ணகி, வட்டார துணைத்தலைவர் மகளிர் உபகாரம்மாள், தலைமையாசிரியர் இரத்தினலூர்துசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.  

 

மாநில செயற்குழு உறுப்பினரும் ஆண்டிமடம் வட்டாரச் செயலாளருமாகிய வேல்மணி கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார். 15 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து அனைத்துப் பணிகளையும் முடித்து தருவதாக உறுதி கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.

Next Story

“மாணவர்கள் காலணி அணியாவிட்டால் சுயமரியாதையை இழக்க நேரிடும்” - சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Students lose self-esteem if they don't wear shoes says mla anbazhagan

வேலூரில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டது.

தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிப்பீட்டுக் குழு ஆய்வில், பள்ளியில் சுகாதாரமில்லாமல் இருப்பதும் பள்ளி மாணவர்கள் காலணிகளை வெளியே விட்டுவிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து இருப்பதைக் கண்ட குழு தலைவர் அன்பழகன், ஏன் காலணி இல்லாமல் அமர்ந்து இருக்கிறீர்கள் என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். 

அதற்கு மாணவர்கள், சுத்தமாக இருக்க வேண்டும் எனப் பதிலளித்தனர். “அப்படியானால் ஆசிரியரும் காலணி இல்லாமல் தானே இருக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பிய அன்பழகன், மாணவர்கள் காலணி அணிய வேண்டும். இல்லையெனில் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதனால் மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும், அதுமட்டுமின்றி சுயமரியாதையை மாணவர்கள் இழக்க நேரிடுவார்கள். மாணவர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். ஆகவே காலணி அணிந்து வகுப்பறையில் அமர வேண்டும்”  என வகுப்பு ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிவிட்டு, மாணவர்களை அவர் கண் முன்னே காலணி அணிந்து வரச் சொல்லி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.