Skip to main content

நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து 137 சவரன் நகை கொள்ளை... கோவையில் துணிகரம் 

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

கோவை இடையர்பாளையம் லூனா அப்பார்ட்மெண்ட் பகுதியில் வசித்து வருபவர் கான்ட்ராக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகராஜ் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வளர்த்து வந்த செல்லப் பிராணியான நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து, பின்னர் வீட்டின் கதவை உடைத்தனர்.

கனகராஜ் தன் மகள் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 137 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.  மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை உடைத்து கும்பல் சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர்-ஐயும் திருடிச் சென்றது.

 

137 jewelry robbery by giving doggie biscuits


இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் மண்ணுத்தி போலீசார் கொள்ளையன் ஒருவன் அகப்பட்டான்.  அந்தக் கொள்ளையனை விசாரித்தபோது இடையர்பாளையம் கான்ட்ராக்டர் கனகராஜ் வீட்டில் 137 சவரன் நகை கொள்ளை உட்பட மூன்று வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலில் நானும் ஒருவன் என ஒப்புக் கொண்டான்.

இதுகுறித்து கேரள போலீசார் அளித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் கேரளா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கொள்ளையனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் கொள்ளையனின் பெயர் பட்டறை சுரேஷ் என்பதும் மதுரை ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.

 

137 jewelry robbery by giving doggie biscuits

 

மேலும் பட்டறை சுரேஷ் மீது கோவையில் மூன்று வழக்குகளும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல கொள்ளைச் சம்பவங்களில் தேடப்படும் பிரபல கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.‌ சுரேஷிடமிருந்து 20 பவுன் நகை மற்றும் கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் சுரேஷிடம் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளையில் ராஜசேகரன், பாண்டித்துரை, மாரியப்பன் என்கிற கருவாட்டு மாரியப்பன், சுரேஷ் என்கிற சுர்லா சுரேஷ் ஆகியோர் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையது தெரிய வந்திருக்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.