Skip to main content

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது; இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

Published on 28/01/2025 | Edited on 28/01/2025
13 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் வழக்கம்போல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். அதோடு மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், 34 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கடந்த 25ஆம் தேதி (25.01.2025) இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று (27.01.2025) அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட 34 மீனவர்களையும், இலங்கை சிறையில் உள்ள 60க்கும் மேற்பட்ட மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை எதிர்த்து ஜனவரி 31ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்