Skip to main content

“துணிந்தால் வெற்றி உனதே..” - மாஸ் காட்டிய மாணவி

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

12th student nandhini talk about exam result

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மாணவி நந்தினி, “நல்லா வரும் என்று நினைத்தேன், ஆனால், இவ்வளவு நல்லா வரும் என்று நான் நினைக்கவேயில்லை. எனது பெற்றோர், ஆசிரியர்கள் என எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. நமக்கு யாராவது மோட்டிவேசன் கொடுக்கனும்னு அவசியமில்லை. நாம் எப்படி ஆகவேண்டும் என்று நினைத்து அதற்காக முழுவதும் உழைத்தோம் என்றால் கண்டிப்பாக நினைத்ததை அடைந்துவிட முடியும். நாம் நினைத்தோம் என்றால் யார் துணையும் இல்லாமல் மேலே வரமுடியும். ஆனால் எல்லாருக்கும் நல்ல கல்வி இருக்கிறது, ஊக்கம் கொடுக்க ஆள் இருக்கிறார்கள். அதனால் எல்லாராலும் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். எதுவும் இல்லை என்று சொல்லாதீர்கள், இருப்பதை வைத்தும் நம்மால் வாழ்கையில் வெல்ல முடியும். எனது வெற்றிக்கு எனது பெற்றோர் முக்கியக் காரணம் நான் படிக்கும்போது எனக்கு எந்த தொந்தரவும் வராமல் பார்த்துக்கொள்வார்கள்.” என்றார்.

 

செய்தியாளர் ஒருவர் அடுத்தது என்ன என்று கேட்டதற்கு, மாணவி நந்தினி, “சி.ஏ படிக்க வேண்டும்” என்றார். எதனால் அதனைத் தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு, “நான் எனது சொந்தக் காலில் நிற்க விரும்புகிறேன். அதனால் அதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்றார். 

 

மாணவியைத் தொடர்ந்து பேசிய அவரின் ஆசிரியர், “எங்கள் பள்ளியில் படித்த மாணவி நந்தினியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. முதலாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை எங்கள் பள்ளியில்தான் படித்துள்ளார். 10 ஆம் வகுப்பில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்தார். அதனையடுத்து 11 ஆம் வகுப்பில் 600க்கு 598 மதிப்பெண் எடுத்திருந்தார். இப்போது 600க்கு 600 மதிப்பெண் எடுத்து பெருமை சேர்த்திருக்கிறார். மாணவி நந்தினி எங்கள் பள்ளிக்குக் கிடைத்தது பெரிய வரம்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
10th class general exam has started

பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.

இன்று தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தமாக மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறைக் கைதிகள் என 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தேர்வு 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது நிரந்தரமாகத் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.