கரூர் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மின் விளக்கை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(54). இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இவரது மகன் கௌசிக்(17) .இவர் கரூர் அடுத்த வெண்ணமலைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
நேற்று மாலை 6 மணி அளவில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் மின் விளக்கை ஆன் செய்வதற்காக வீட்டின் மாடிக்குச் சென்ற கௌசிக் மின் விளக்கை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவஇடத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். சத்தம் கேட்டு மேலே வந்து பார்த்த சுப்பிரமணியன் தனது மகன் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கௌசிக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் விளக்கை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.