
கோவையில் கேரளாவை சேர்ந்த தங்க வியாபாரிகளிடம் இருந்து 1.25 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தங்க வியாபாரிகளான ஜெய்சன், ஜேக்கப் ஆகிய இருவரும் சென்னையில் இருந்து தங்க நகைகளை வாங்கிக் கொண்டு கோவைக்கு ரயில் மூலம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பாலக்காடு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி காரில் சென்று கொண்டிருந்த பொழுது வாளையார் அருகே இவர்கள் பயணித்த காரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வழிமறித்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ 250 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் ஜெய்சன், ஜேக்கப் ஆகிய இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்டத்தின் கந்தே கவுண்டன்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் மொபைல் போன் சிக்னல்களை அடிப்படையாக வைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.