Skip to main content

1200 ஆண்டுகள் பழமையான 'செக்குகல்வெட்டு' கண்டெடுப்பு!!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

 1200 year old 'stone' discovery !!

 

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், சங்கீதா ஆகியோர் தமிழரசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள நாகலூரில் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 1200 ஆண்டுகள் பழமையான செக்கு கல்வெட்டு,1080 ஆண்டுகள் பழமையான சோழர்கால கல்வெட்டு மற்றும் 17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்து ஆய்வு செய்தனர்.

 

செக்கு கல்வெட்டு

 

பழங்காலத்தில் மின்சாரம் இல்லாதபோது வெளிச்சத்துக்கு விளக்குகளை எரியவிடவும் , சமையலுக்கும் எண்ணெய்யின் தேவை மிக முக்கியமாக இருந்துள்ளது. எண்ணெய் எடுக்கக் கல்லால் ஆன சிறு உரல் போன்ற கல்செக்குகள் பயன்படுத்தப்பட்டன. இவை கோயில் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கென செய்து தானமாகத் தரப்பட்டன. செக்கில் எண்ணைய் ஆட்டுபவர்கள் செக்குக்கு கூலியாக ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணெய்யை கோயிலுக்கோ, அரசுக்கோ செலுத்தினர்.

 

குறுநிலத்தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் போன்றோர் இதுபோன்ற கல்செக்கை உருவாக்கி தானமாக கொடுத்தனர். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நலம் பெறவும் வேண்டுதலின் பேரில் இத்தகைய செக்குகள் தானமாக தரப்பட்டன. இப்படி தானமாக தரும்போது அதை செய்து கொடுப்பவர் தன் ஊர், தந்தை பெயருடன் தன் பெயரையும் கல்வெட்டாய் அந்த கல்செக்கில் பொறித்து தரும் வழக்கமும் இருந்துள்ளது.

 

 1200 year old 'stone' discovery !!

நாகலூர் செக்குகல்வெட்டு

 

நாகலூரில் மாரியம்மன் கோயில் தெருவில் சாலையில் ஓரத்தில் இருந்த ஒரு கல்செக்கு ஆய்வு செய்யப்பட்டது. கிழக்குப்புறம் சாய்ந்த நிலையில் புதையுண்ட நிலையில் கல்செக்கு காணப்பட்டது. இதன் வெளி விளிம்பு விட்டம் 67 செ.மீ, உள் விளிம்பு 54 செ.மீ, நடுவில் உள்ள குழியின் ஆழம் 32 செ.மீ ஆகவும் உள்ளது. உரலின் மையப்பகுதியில் ஒரு வரியில் கல்வெட்டு வளைவாக வெட்டப்பட்டுள்ளது. எழுத்தமைதியைக்கொண்டு இது பிற்கால பல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதலாம்.1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு இதுவாகும். கல்வெட்டானது தமிழ் மற்றும் கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது.

 

ஸ்ரீ என்ற எழுத்துடன் கல்வெட்டு துவங்குகிறது. ‘'ஸ்ரீ குந்தை காடன்முரி செய்வித்தது' என கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. இதில் குந்தை என்பது அவர் தந்தையின் பெயரையும் காடன்முரி என்பது கல்செக்கை தானம் கொடுத்தவரின் பெயராகவும் கருதலாம். ஸ்ரீகுந்தை காடன்முரி என்பவர் இந்த கல்செக்கை செய்து தந்துள்ளார் என்பது இதன் பொருளாகும். செய்வித்தது என்ற சொல்லில் வரும் ய் என்ற யகரம் இக்கல்வெட்டில் வித்தியாசமாக வெட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு

 

 1200 year old 'stone' discovery !!

 

நாகலூரில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் கருவறையில் பெருமாள் சிலைக்கு முன் பதிக்கப்பட்டுள்ள ஒரு கல்லில் 14 வரிகளில் கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இதில் 5 வரிகள் மட்டுமே படிக்கும் நிலையில் உள்ளது. இக்கல்வெட்டின் நீளம் 88 செ.மீ,அகலம் 64 செ.மீ ஆகும். இது 1080 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதலாம் பராந்தக சோழனின் முப்பத்தி மூன்றாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். கி.பி 940 ஆம் ஆண்டு இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மருக்கு என்ற முதலாம் பராந்தக சோழனின் மெய்கீர்த்தியோடு கல்வெட்டு துவங்குகிறது. இப்போது நாகலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் கல்வெட்டில் நாவலூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் நாவலூர் என்று பெயர் அமைந்திருக்கலாம்.17 ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும் நாவலூர் என்றே குறிப்பிடுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்புதான் நாவலூர் என்ற பெயர் நாகலூர் என மருவி உள்ளது. அக்காலத்தில் பரனூர் கூற்றத்தில் நாவலூர் இருந்துள்ளது.

 

தொண்டைமான் கல்வெட்டு

 

நாகலூர் வரதராஜபெருமாள் கோயில் கருவறையின் வெளிப்புறத்தில் தெற்குபக்க சுவரில் 5 வரிகளில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. எழுத்தமைதியை கொண்டு இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். இந்த கல்வெட்டிலும் இந்த ஊர் நாவலூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்ததாண்டயத்தொண்டைமான் என்பவர் இந்த பெருமாள் கோயிலுக்கு ஆயிரம் குழி நஞ்சை நிலத்தை சர்வமாநியமாக தானம் செய்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. சந்திரன் உள்ளவரை இந்த தானம் நிலைத்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.மிகப்பழமை வாய்ந்த செக்குக்கல்வெட்டை பாதுகாக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

 


 
 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.