Skip to main content

தலைமை ஆசிரியையின் அலட்சியத்தால் தீயில் கருகிய 12 வயது சிறுமி

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
va


சேலம் அருகே, தலைமை ஆசிரியையின் அலட்சியத்தால் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற சிறுமி தீயில் கருகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மனைவி புனிதா. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், விஜயபாரதி (12) என்ற மகளும் உள்ளனர். மகள், தெத்திகிரிப்பட்டி அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள்.


கடந்த 5.10.2018ம் தேதி, காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வழக்கம்போல் விஜயபாரதி சென்றிருந்தாள். பள்ளித் தலைமை ஆசிரியை குழந்தையம்மாள், ஒரு சுற்றறிக்கையை சிறுமியிடம் கொடுத்து அனுப்பி, அதை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களிடம் காட்டி கையெழுத்துப் பெற்று வருமாறு பணித்துள்ளார்.


சுற்றறிக்கையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வெளியே உள்ள மற்ற வகுப்பு ஆசிரியர்களிடம் கொண்டு சென்றுவிட்டு மீண்டும் தலைமை ஆசிரியையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பள்ளிக்கு அருகே ஒரு கோயில் உள்ளது. அந்தக்கோயிலில் சிறுமி விஜயபாரதி சாமி கும்பிட்டாள். 


அப்போது திடீரென்று சிறுமியின் துப்பட்டாவில் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ பட்டதால், மளமளவென தீப்பிடித்தது. தீப்பட்டதால் துணி உடலில் ஒட்டிக்கொண்டது. இதனால் சிறுமியின் வலது புறத்தில் கழுத்து, வலதுபக்க வயிறு, தொடை வரை தீக்காயம் ஏற்பட்டது. 


சம்பவத்தின்போது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கார் ஓட்டுநரும் மற்றும் சிலரும் சிறுமியை மீட்டு மேச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுகுறித்து சிறுமியின் தாயார் புனிதா கூறுகையில், ''பள்ளி நேரத்தில் என் மகளிடம் வேலை வாங்கியதுடன், சுற்றுச்சுவரை கடந்து சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வகுப்புக்கு வராததை கண்காணிக்கத் தவறிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டதற்கு, உங்கள் மகளுக்கு நான் வேலை கொடுக்கவில்லை. வேறு ஒரு மாணவிக்குதான் வேலை வைத்தேன். பத்து பேரை வைத்து இந்தப் பிரச்னையை பேசி முடிச்சிக்கலாம் என்று பொறுப்பற்ற முறையில் கூறினார். அவர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். 


மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

’விரைவில் பாடம் புகட்டுவோம்’-கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
vb

 

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர்வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

     நடிகர் விஜய் படமான சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக  கூறி அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும்,பொது இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த சர்கார் படப்பேனர்களை கிழித்ததோடு வன்முறையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அங்கங்கே அதிமுக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு வரும் நிலையில்  காவல்துறையினர் அதனை தடுக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

 

  இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர் வைத்ததாக விஜய்ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள  நடிகர் விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு பேனர் கிழித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

’’ 10 ம்தேதி திருவாரூரில் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுக ஒ,செ, நா,செ க்களே முன்னின்று கிழித்ததை பொதுமக்கள் அனைவருமே பார்த்தனர். அதே போல் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜின் உறவினர்கள் கட்சியின் பொறுப்பாளர்களே நேரடியாக காவலர்களின் பாதுகாப்போடு கிழித்ததை   பொதுமக்கள் பார்த்தனர். இதன் மீது ஏன் நடவடிக்கை இல்லை. எம்,ஜி,ஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் மலை மலையாக பேனர்கள், வளைவுகளை குவித்திருந்தனரே அதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள். அதற்கான அதிகாரம் யார் கொடுத்தது, அதிமுகவினர் மட்டும் தான் இந்த நாட்டு பிரஜைகளா, அவர்கள் பேனர்வைக்க அனுமதி வாங்கிய ஆதாரம் காட்டமுடியுமா, இதற்கு விரைவில் பாடம் புகட்டுவோம்,’’ என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.