12 student marriage youth arrested salem police

சேலம் அருகே பிளஸ்2மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்த தனியார் மருத்துவமனை ஊழியர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அரசுப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த அந்த மாணவி, பொதுத்தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார்.

Advertisment

இவரை ஜூன் 8- ஆம் தேதி, ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கடத்தூர் மோளையன் தெருவைச் சேர்ந்த மயில்சாமி (வயது 30) என்பவர், திருமண ஆசை காட்டி, கடத்திச்சென்று விட்டார். அவர், தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

மாணவியின் பெற்றோர் இதுகுறித்து மல்லூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் அம்சவள்ளி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவியை கடத்திச்சென்ற மயில்சாமி, சேலத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டதும், உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து மாணவி தங்கியிருக்கும் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவிக்கு 18 வயது பூர்த்தி அடையாததால், மயில்சாமி மீது குழந்தை திருமணம் தடைச்சட்டத்தின் கீழும், போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.

அவரை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவ்துறையினர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.