12 people including 5 women arrested for selling ganja in Tiruvannamalai

Advertisment

திருவண்ணாமலை நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் போலீசார் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது திருவண்ணாமலை சமுத்திரம் காலனி மற்றும் கல் நகர் பகுதியை சேர்ந்த சகுந்தலா, சுகன்யா, சுபாஷினி, ஜெயப்பிரதா, மதன், சக்திவேல், தனுஷ் சூர்யா ஆகிய 8 பேரும் நகரில் பல்வேறு இடங்களில் மறைமுகமாக கஞ்சாவை மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் கடந்த இரண்டு தினங்களாக நடத்திய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 8 பேரையும் பல்வேறு இடங்களில் மடக்கி பிடித்து கைது செய்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 11 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்ததுடன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த இரண்டாவது நாள், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேலுக்கு கிடைத்த ரகசியத்தகவலின் அடிப்படையில் செங்கம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலிஸார் நடத்திய வாகன சோதனையில் சந்தேகம் ஏற்படும் விதமாக சுற்றித் திரிந்த மூன்று இளைஞர்களை விசாரணை செய்த போது அவர்கள் திருவண்ணாமலை கல்நகர்ப் பகுதியைச்சேர்ந்த கிருஷ்ணா(18), சூர்யா(17) சஞ்சய்(22) ஆகிய 3 இளைஞர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

Advertisment

பின்னர் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப்பறிமுதல் செய்த காவல் துறையினர் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை கல்நகர் பகுதியில் உள்ள சகுந்தலா(75) என்பவர் செங்கம் பகுதியில் கொடுத்து அனுப்பியதாக காவல்துறையினர் விசாரணையில் மூவரும் கூறிய பின்னர் விரைந்து சென்ற செங்கம் காவல்துறையினர் சகுந்தலாவைக் கைது செய்து அவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வரும் ஆகாஷ் என்பவர் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள ஆகாஷை தேடி வருகின்றனர்.