Skip to main content

12 கோடி பேர் டிக் டாக்கில் லைக்கிற்கு வெயிட்டிங்...!! டிக் டாக் தற்கொலையில் தமிழகம் முன்னிலை...!!

Published on 16/06/2019 | Edited on 16/06/2019

இந்தியாவில் டிக் டாக் செயலியில் தங்கள் நடிப்பு திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் எண்ணிக்கை 12 கோடி பேர் என்று டிக் டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீடியோ வெளியிடுபவர்கள் தற்கொலை எண்ணத்தை தவிர்க்க இனி டிக் டாக்கிற்கு அடிமையானவர்களுக்கு அந்த நிறுவனமே கவுன்சிலிங் அளிக்கவும் உள்ளது. 

 

tik tak

 

டிக் டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு தங்கள் திறமைகளை காட்டி வந்த சிலர் தற்போது டிக் டாக்கில் கிடைக்கும் லைக்கிற்காக ஏங்கி முழு நேர அடிமைகளாக மாறிவிட்டனர். இந்தியாவில் டிக் டாக், ஹலோ, விகோ  போன்ற  வீடியோ செயலிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு பொழுதுபோக்கு விரும்பிகளை தொடர்ந்து ஆட வைத்துக் கொண்டிருப்பது பைட் டான்ஸ்  என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

 

இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் அலுவலகங்களை கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்திற்கு உலக அளவில் 50 அலுவலகங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடியா, ஹிந்தி உட்பட 11 மொழிகளிலும், சர்வதேச அளவில் 150 மொழிகளிலும் செயலிகளை இயக்குகிறது.

 

tik tak

 

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்டிதொட்டிகளிலும், நவநாகரீகமான நகரங்களிலும், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என டிக் டாக்கில் செய்கின்ற சேட்டைகளை பார்த்து, ரசித்து அதனை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காகவே 500 பேர் கொண்ட பணியாளர்கள் குழு 24 மணி நேரமும் பணியில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் டிக் டாக்கில் ஆபாசம் மற்றும் வன்முறையை தூண்டும் 60 லட்சம் வீடியோக்களை பணியாளர்கள் அழித்துள்ளதாக பைட் டான்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

tik tak

 

12 கோடி பேர் தங்களது வீடியோக்களை டிக் டாக்கில் பதிவு செய்துள்ளதாகவும்,  ஹலோ செயலியில் நான்கு கோடிப் பேரும், வீகொ செயலியில் 2 கோடி பேரும் தங்களது திறமைகளை காட்டி வீடியோக்களை பதிவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்மைக்காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள டிக் டாக் செயலியை பாதுகாப்பானதாக மாற்ற 13 விதிகளுடன் செயல்பாட்டை மேம்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

அதன்படி 13 வயதிற்கு உட்பட்டோர் டிக் டாக் பயன்படுத்தாமல் இருக்கவும், ஒருவர் அதிகபட்சம் எத்தனை நிமிடங்கள் அதனை பயன்படுத்த வேண்டும் என நேர கட்டுப்பாடும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முகநூல் போல கடவு சொல் பயன்படுத்தும் முறை செயல்பாட்டில் உள்ளது. இதில் உள்ள வீடியோக்கள் அனைத்தும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆபாச வீடியோக்கள் உடனடியாக நீக்க  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 13 விதிகள் அடங்கிய உத்தரவாதம் கொடுத்த பின்னரே இந்தியாவில் டிக் டாக்குக்கு விதிக்கப்பட்ட தடை விலகல் ஆனது எனவும் பைட் டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

tik tak

 

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் தான் டிக் டாக்கை முன்வைத்து தற்கொலை சம்பவங்கள் மற்றும் சாதிய மோதல்கள், ஆபாச பேச்சுக்கள், கலாச்சார சீரழிவு போன்ற சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக புகார் அளிக்க தனி தொலைபேசி எண்ணையும், கண்காணிப்பு அதிகாரி ஒருவரையும் பணியமர்த்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

தற்கொலை செய்யும் எண்ணத்தில் இனி யாராவது வீடியோவை பதிவிட்டால் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு கவுன்சிலிங் அளிக்கும் திட்டம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தநிலையிலும்  இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடைவந்துவிட கூடாது என இவ்வளவு சிரத்தை எடுக்க காரணம் இந்த செயலி மூலம் இந்தியாவில் விளம்பர வருவாயாக மட்டும் பல நூறு கோடிகளை குவிப்பதால்தான் பைட் டான்ஸ்  தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளக்கூடாது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இருப்பினும் இந்தியாவில் பதிவிடும் வீடியோக்கள் டிக் டாக்  செயலியை மீண்டும் தெருவிற்கு இழுத்து வந்து விடும் என்றே தோன்றுகிறது.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய கணவருக்கு சிறை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 The court action decision for Husband jailed for sending video to wife

கர்நாடகா மாநிலம், பெங்களூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 36 வயது மிக்க இளைஞர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். அவருக்கும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சிறிது நாளிலேயே, கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் அந்த பெண், கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால், கணவர் விவாகரத்து தரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் மனமுடைந்த அந்த பெண் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே, அந்த பெண் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு அவரது கணவர் மின்னஞ்சல் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி, ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி வந்துள்ளார். இதில் கோபமடைந்த அந்த பெண், இந்த விவகாரம் குறித்து பெங்களூரில் வசித்து வரும் தனது சகோதரரிடம் கூறியுள்ளார். அதன் பேரில், அந்த பெண்ணின் சகோதரர் பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பெண், கணவர் அனுப்பிய ஆபாச வீடியோக்கள் தொடர்பானது குறித்து தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று (19-03-24) நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது. அதில், விவாகரத்து கேட்டு பிரிந்து வாழும் மனைவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியது உறுதியானதால், தனியார் நிறுவன ஊழியருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.