11 people admitted to hospital after drinking liquor in Vikravandi

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டியில் விறுவிறு என வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டி.கொசபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கத்திக்குத்து சம்பவத்தால் வாக்குச்சாவடி பாதுகாப்பில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வி எழுந்திருந்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி பகுதியில் சாராயம் குடித்த 11 பேர் மருத்துவமனையில் வாந்தி, மயக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியில் இருந்து சாராயம் வாங்கி வந்த சக்திவேல் என்பவர் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பூரிகுடிசை என்ற கிராமத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த 11 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

nn

வாக்குப்பதிவு நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வரப்பட்டு அங்கு கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபரான சக்திவேலை கஞ்சனூர் போலீசார் கைது செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11 பேரும் தற்பொழுது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் பரபரப்பாக இடைத்தேர்தலுக்கானவாக்குப்பதிவு நடைபெற்று வரும் விக்கிரவாண்டி தொகுதியில் மீண்டும் சாராயம் குடித்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.