சென்னை குன்றத்தூரில் 10 வயது சிறுமி கனரக வாகனம் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் சென்னை கொளத்தூரில் தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 10 வயது சிறுமி தண்ணீர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு சென்னை காவல் துறையினர் சார்பில் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

Advertisment

காலை 7 மணிமுதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் இன்று குன்றத்தூரில் சாரதா என்ற பெண் தனது இரு சக்கர வாகனத்தில் இரண்டு உறவுக்கார சிறுமிகளை ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி மைதானத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது குன்றத்தூர் பிரதான சாலையில் அதே சாலையில் வந்த டிப்பர் லாரி சாரதாவின் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளது. அதில் சாரதாவும் ஒரு சிறுமியும் சாலையோரம் இடது பக்கம் விழுந்துள்ளனர். இன்னொரு சிறுமி சாலையின் வலது பக்கம் விழுந்து லாரியின் டயருக்கு அடியில் விழுந்துள்ளார். அதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இறந்த சிறுமி ஸ்கூட்டர் ஓட்டி வந்த சாரதாவின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.  

சம்பவம் காலை 7 மணியளவில் நடந்ததாக கூறப்படும் நிலையில் விபத்து நடந்தவுடனே லாரியை இயக்கிய ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். பின்பு காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்த சிறுமையை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து லாரியை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.