Skip to main content

ஜூன் 20-ல் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

10th, 12th class general examination results to be released on June 20!

 

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022- ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான 12- ஆம் வகுப்பு மற்றும் 10- ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று அண்ணா நூற்றாண்டு கூட்டரங்கில் வெளியிடப்படவுள்ளது. 

 

வரும் ஜூன் 20- ஆம் தேதி அன்று காலை 09.30 மணிக்கு 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும், பகல் 12.00 மணிக்கு 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்படவுள்ளது. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலே குறிப்பிட்டுள்ள இணையதளப் பக்கத்திற்குச் சென்று பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து எளிதாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

 

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தி வழியாகத் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

10- ஆம் வகுப்புத் தேர்வு முடிவு நாளை வெளியாகியிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரேநாளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனதருமை மாணவச் செல்வங்களே...” - முதல்வர் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Chief Minister Stalin congratulates students appearing for 10th public exam

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது.  செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!  நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தனியார் பல்கலைக்கழகம் எதிரே கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
cannabis chocolates seized from snack shop opposite private university.

வேலூர் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதைத் தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

காட்பாடி டி.எஸ்.பி. சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் (வி.ஐ.டி.) எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் கடையில் சோதனை மேற்கொண்டனர். அந்த கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21) , மனிஷ் குமார் கம்டி(21)  ஆகிய இருவரை காட்பாடி போலீசார் கைது செய்தனர். 

இந்தப் பகுதியில் இதுபோல் பல கடைகளிலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதும் அதை கல்லூரி மாணவ - மாணவிகள் வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை காவல்துறை தொடர்ந்து ஆய்வு மூலம் பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்பவர்களும் அதன் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.