108 ஆம்புலன்சில் பிரசவம்!

108 Relatives praise the employees who gave birth in the ambulance

108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக உள்ளது. எந்த நேரத்திலும் எந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தாலும் அடுத்த குறிப்பிட்ட நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்கின்றனர்.

அதே போல நேற்று(17.3.2024) காலை ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காகச்சேர்க்கப்பட்ட செந்தமிழ் (வயது 26) என்ற கர்ப்பிணிக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அவசர அழைப்பிற்கு ஆவுடையார்கோயில் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த செந்தமிழை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி செல்லும் வழியில் செந்தமிழுக்கு வலி அதிகமானது.

அதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜழகன் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த ஆம்புலன்சின் அவசர கால மருத்துவ நுட்புணர் ஐஸ்வர்யா பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சாலை ஓரத்திலேயே ஆம்புலன்ஸில் வைத்தே பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்திலேயே ஆண்குழந்தை பிறந்ததைப் பார்த்து அருகில் இருந்த உறவினர்கள் நிம்மதியடைந்து ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி நன்றி கூறினர். மேலும் சாலையோரம் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட பெண்ணும் குழந்தையும் நலமுடன் இருந்தனர். தொடர்ந்து கூடுதல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

pudukkottai
இதையும் படியுங்கள்
Subscribe